சென்னை விமான நிலையத்தில் 1.72 கிலோ தங்கம் பறிமுதல்: ஒருவர் கைது.!

Scroll Down To Discover
Spread the love

சென்னை விமான நிலையத்தில் இரு பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 1.72 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

உளவுத் தகவல் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த முகமது அனாஸ் என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது கால்சட்டை பாக்கெட்டில் இருந்த சாக்ஸில், 4 கருப்பு பொட்டலங்களும், இளம்சிவப்பு நிற நீண்ட பட்டையும் இருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது 22 தங்க துண்டுகள், 1.28 கிலோ எடையில் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.59.18 லட்சம். சுங்கச்சட்டத்தின் கீழ் இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.


இவரிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்க துண்டுகள் விமானத்தின் இருக்கை ஒன்றின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வருமுன், அந்த விமானம் சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வந்ததாகவும் தெரிவித்தார். மற்றொரு சம்பவத்தில் லக்னோவில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானத்தில் வந்த ராவுத்தர் நைனா முகமது என்பவரிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அவரது ஷூவிலிருந்து ஒரு தங்க பசை பாக்கெட் மீட்கப்பட்டது. அவரது மலக் குடலில் இருந்து 3 தங்க பசை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றிலிருந்து 446 கிராம் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.20.6 லட்சம். இவரிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்கம் விமானத்தின் இருக்கை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த விமானம் இதற்கு முன்பு துபாயிலிருந்து லக்னோ வந்ததாகவும் தெரிவித்தார்.மொத்தம் 1.72 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.79.78 லட்சம்.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.