கேரளாவில் 29 கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை; ஏற்பாடுகள் தீவிரம்

Scroll Down To Discover
Spread the love

கேரளா : கேரளாவில் உள்ள 29 முக்கிய கோவில்களில் ஈஷா மஹாசிவராத்திரி விழா: நேரலை செய்யப்பட்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கேரள மாநிலத்தில் இருக்கும் ஈஷா தன்னார்வலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி வளாகத்தில், வரும் பிப். 15-ஆம் தேதி, சத்குருவின் முன்னிலையில் நடைபெறும் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழாவில் கேரள மாநில மக்களும் பங்கேற்கும் வகையில், கேரள மாநிலம் முழுவதும் உள்ள 29 கோயில்களில் இவ்விழா நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதில் குறிப்பாக 12 கோயில்களில் பங்கேற்பாளர்களுக்கு ‘ருத்ராட்ச தீட்சை’ வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஆதியோகி முன்பு நடைபெறும் இந்த மஹாசிவராத்திரி விழா, உலகிலேயே அதிக மக்களால் நேரலையில் பார்க்கப்படும் மிகப்பெரிய ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. சுமார் 24 மொழிகளில், 100-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இணையதளங்கள் வழியாக 14 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த விழாவைக் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மஹாசிவராத்திரி நாள் இரவில் மஹாமந்திர உச்சாடனம் மற்றும் சக்திவாய்ந்த தியானங்களை சத்குரு வழிநடத்த உள்ளார். இதனுடன் மக்களை இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும் வகையில் பாரத பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

கேரளாவில் உள்ள பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள கோயில்களிலேயே திரளாகக் கூடி, அந்தப் புனிதமான இரவின் ஆற்றலை நேரடியாக அனுபவிக்க ஈஷா தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.