சென்னையில் அதிமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உடல்நலக் குறைவால் பங்கேற்காததால், தற்காலிக அவைத் தலைவராக கேபி முனுசாமி நியமனம் செய்யப்பட்டார்.
இதையடுத்து இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு, பின்னர் பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் அ.தி.மு.க. செயற்குழு- பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
2026ல் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும். அதற்கு அத்தனை பேரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் நினைத்தால் நிச்சயம் நடக்கும். இதனை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. 2011ல் திமுகவால் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியவில்லை. அதேபோல் 2014 லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை.
28 மாதங்கள் கழித்து மகளிருக்கு ரூ.1000 திட்டம் தொடங்கப்பட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது கூட அ.தி.மு.க.வின் அழுத்தத்தால் தான். மக்கள் பணம் பெற்றுக்கொண்டாலும் அ.தி.மு.க.வுக்கு தான் மக்கள் ஓட்டு போடுவார்கள்.
அம்மா மினி கிளினிக், இருசக்கர வாகனம் போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்தியது. அ.தி.மு.க. ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. மக்களின் செல்வாக்கை தி.மு.க. அரசு இளந்து விட்டதால் 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவிப்பு. கல்லூரி திறக்கப்பட்டு 5 மாதம் கழித்து தான் மடிக்கணினி வழங்கப்படுகிறது, இதனால் என்ன பயன்?
அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் மாணவர்களின் வாக்குகள் தேவை என்பதால் மடிக்கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சியை தி.மு.க. பிடித்துள்ளது. கேஸ் சிலிண்டர் மானியம், பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, கல்விக் கடன் ரத்து என்னவானது?
டெல்டா மாவட்டங்களில் 15 நாட்கள் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் நெல்மணிகள் நாசம். 15 நாட்களாக நெல் மூட்டைகளை காவல் காத்துக்கொண்டிருக்கிறோம் என விவசாயிகள் கூறினர். டெல்டாவில் பயிர் பாதிப்புகளை பார்க்காமல் ரெயில் நிலையத்திற்கு சென்றார் உதயநிதி.* விவசாயிகளை பார்ப்பதற்கு அஞ்சிதான் பார்க்காமல் சென்று விட்டார் துணை முதலமைச்சர். பொருட்களை வாங்கும் சக்தியை ஏழை மக்கள் இழந்து விட்டனர்.
மின் கட்டணத்தை 52 சதவீத அளவுக்கு தி.மு.க. அரசு உயர்த்தி இருக்கிறது. மின் கட்டணம் என்று சொன்னாலே ஷாக் அடிக்கிறது என்று கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. ஆட்சியில் மின்சாரக் கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கிறது. வரி மேல் வரி போட்டு மக்களை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.
உடல் உறுப்பை விற்று வாழ்க்கையை நடத்தும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. கிட்னி முறைகேடு தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.தி.மு.க. ஆட்சியில் உடல் உறுப்பைக் கூட விட்டு வைக்கவில்லை. அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் கிட்னி முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
மகளிருக்கு இலவச பயணம் என்று கூறுகிறீர்கள், ஆனால் பேருந்துகள் ஓட்டு உடைசலாக உள்ளன. 2019-ல் அதிமுக ஆட்சியில் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகள் பெறப்பட்டன. 77 சதவீத அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் பச்சைப்பொய் சொல்கிறார். முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டால், வெள்ளை காகிதத்தை காட்டுகிறார்கள்.
அ.தி.மு.க.வின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது தி.மு.க. அரசு. ஏதாவது ஒரு திட்டத்தை தி.மு.க.வால் கொண்டு வர முடிந்ததா? கொரோனா காலத்தில் வரியே இல்லாமல் ஆட்சியை நடத்தினோம் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றது என்று கூறினார்.

Leave your comments here...