காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி.. தீவிரமாகத் தேடும் போலீசார்..!

Scroll Down To Discover
Spread the love

சீர்காழி அருகே வழக்கு விசாரணைக்காக அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக அர்ஜூனன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த மணிமாறன், வினோத் என்பவர் தன்னை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். இதையடுத்து அர்ஜூனன் நடத்திய விசாரணையில் வினோத்திற்கு ஆதரவாக தைக்கால் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் மணிமாறனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக தெரியவந்தது.

இதையடுத்து சிறப்பு காவல் உதவிஆய்வாளர் அர்ஜூனன், செந்திலை தொடர்பு கொண்டு வழக்கு விசாரணைக்காக வருமாறு அழைத்தார். அப்போது அவரை, செந்தில் ஆபாசமாக பேசியதுடன் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் உதவி ஆய்வாளர் அர்ஜூனன், ரவுடி செந்தில் மீது சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ரவுடி செந்திலை தேடி வருகின்றனர்.