கார்கில் போர் வெற்றி தினம் ; ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை

இந்தியா

கார்கில் போர் வெற்றி தினம் ; ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை

கார்கில் போர் வெற்றி தினம் ;  ராணுவ மருத்துவமனைக்கு குடியரசுத்தலைவர் நன்கொடை

கார்கில் போரின் போது, வீரத்துடன் போராடி, உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு, ரூ.20 லட்சம் நன்கொடை அளிப்பதற்கான காசோலையை இன்று (26 ஜுலை, 2020) வழங்கினார்.

கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் திறம்பட பணியாற்றத் தேவையான சாதனங்களை வாங்க இந்த நிதி உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்கில் போரில் இந்தியா வெற்றியடைந்ததன் 21-வது ஆண்டு தினம் இன்று வெற்றி தினமாகக் கொண்டாடப்படுகிறது.


குடியரசுத்தலைவர் மாளிகைச் செலவினங்களில் மேற்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கை மூலம், கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் நிதி கிடைக்கச் செய்யும் விதமாக, ராணுவ மருத்துவமனைக்கு, குடியரசுத் தலைவரால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகையில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வாயிலாக, செலவினங்களைக் குறைக்க குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியிருந்தார். இதன் ஒரு பகுதியாக, பாரம்பரிய நிகழ்ச்சிகளின் போது பயன்படுத்துவதற்காக ஒரு சொகுசு வாகனம் வாங்கும் திட்டத்தை குடியரசுத்தலைவர் ஏற்கனவே தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

குடியரசுத் தலைவர் ராணுவ மருத்துவமனைக்கு அளித்துள்ள நன்கொடையிலிருந்து, PAPR (காற்று சுத்திகரிப்பு சுவாசக் கருவி) வாங்கப்பட உள்ளது. அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும்போது மருத்துவப் பணியாளர்கள் சுவாசிப்பதற்கும், தொற்று பரவாமல் தற்காத்துக் கொள்ளவும் இத்தகைய அதிநவீனக் கருவிகள் உதவிகரமாக இருக்கும். நோயாளிகளை கவனிப்பதில் அதிக அக்கறை காட்டவும், கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் இது பெரிதும் பயன்படும்.

Leave your comments here...