‘ரெட் புலி’ போதை மாத்திரைகள் கடத்தல் – சென்னை விமானத்துறை சுங்க அதிகாரிகளால் பறிமுதல்..!

இந்தியா

‘ரெட் புலி’ போதை மாத்திரைகள் கடத்தல் – சென்னை விமானத்துறை சுங்க அதிகாரிகளால் பறிமுதல்..!

‘ரெட் புலி’ போதை மாத்திரைகள் கடத்தல் – சென்னை விமானத்துறை சுங்க அதிகாரிகளால் பறிமுதல்..!

சென்னை விமான சுங்கத்துறைப் புலனாய்வு அதிகாரிகள், புலனாய்வு அடிப்படையில், போதை மருந்து உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட, நெதர்லாந்திலிருந்து, சென்னையில் உள்ள வெளிநாட்டு அஞ்சல்களுக்கான அலுவலகத்துக்கு வந்த அஞ்சல் பொட்டலத்தைக் கைப்பற்றினர்.

பரிசோதித்துப் பார்த்த போது அந்தப் பொட்டலத்தில் MDMA (3, 4 மெத்திலின் டை ஆக்சி மெதாம்ஃபெடாமின்) என்ற போதைப் பொருள் கொண்டதாக சந்தேகிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வண்ண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. எம் டி எம் ஏ உள்ளதாக சந்தேகிக்கப்படும் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மொத்தம் 100 மாத்திரைகள் NDPS சட்டம் 1985இன் கீழ் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.


அறுகோண வடிவிலான இந்த மாத்திரைகள் பொதுவாக ரெட் புலி’ என்றழைக்கப்படுகின்றன. மாத்திரைகளின் ஒரு பக்கத்தில் ‘புல்’ என்று முத்திரையிடப்பட்டிருக்கும். இந்த மாத்திரைகள் சுமார் 250 மில்லி கிராம் எம் டி எம் ஏ கொண்டவை. இது மிக அதிகமான மருந்தளவாகும். இங்கிலாந்தின் வாரிக்ஷையர் பகுதியில், சமீபத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த ரெட் புலி எம்டிஎம்ஏ மாத்திரையை சாப்பிட்ட ஒரு ஆண் இறந்தார். ஒரு பெண்ணின் உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

சென்னை அம்பத்தூரிலுள்ள குடியிருப்புப் பகுதிக்கு அந்த பொட்டலம் அனுப்பப்பட்டிருந்தது. அந்தப் பகுதியில் விசாரணை நடத்திய போது, அந்த முகவரி, முழுமையற்ற முகவரி என்பதும், அந்தப் பொட்டலத்தில் குறிப்பிடப்பட்ட பெயர் கொண்ட யாரும் அங்கு வசிக்கவில்லை என்பதும் தெரியவந்தது. குற்றவாளியைப் பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் திரு.ராஜன் சவுத்ரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Leave your comments here...