கொரோனா வைரஸ் எதிரொலி : 58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

இந்தியா

கொரோனா வைரஸ் எதிரொலி : 58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

கொரோனா வைரஸ் எதிரொலி : 58 ஆண்டுகளுக்கு பிறகு ரத்தான உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா!

கேரளாவில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா கொரோனா பாதிப்புகளால் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். கேரளாவின் பாரம்பரிய அடையாளமாக இந்த பூரம் திருவிழா பார்க்கப்படுகிறது. திருச்சூர் பூரம் திருவிழா ஒருநாள் விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், அதற்கான ஏற்பாடுகள் ஒருமாதகாலத்திற்கு முன்னரே துவங்கிவிடும்.திருச்சூர் மாவட்டத்தின் ஆரட்டுபுழா கோயிலில் திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த திருவிழாவில், திருச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கோயில்கள் கலந்து கொள்ளும். யானைகள் அணிவகுப்பு நிகழ்ச்சி, கண்கொள்ளாக் காட்சி ஆகும்.பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் திருச்சூர் பூரம் விழா, அதே உற்சாகத்துடனும் கோலாகலமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த திருவிழாவில் உள்ளூர், உள்நாட்டு மக்கள் மட்டுமல்லாது, வெளிநாட்டினரும் அதிகளவில் கலந்துகொள்கின்றனர்.

பூரம் திருவிழாவிற்கு ஏழுநாட்களுக்கு முன்னர் பரமேக்காவு பகவதி கோயில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களில் பூரம் திருவிழா கொடியேற்றம் நடைபெறும். பூரம் திருவிழா அன்று 20க்கும் மேற்பட்ட கோயில்களிலிருந்து விக்கிரகங்கள் அணிவகுத்து வந்து திருச்சூர் வடக்கும்நாதன் கோயிலில் கூடும். அந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கானோர் கோயில் வளாகத்தில் கூடுவர்.திருச்சூர் பூரம் திருவிழாவின் மற்றொரு முக்கியமான அம்சம், செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுவது ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேளம் அடிப்படையிலான இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கும் இசைநிகழ்ச்சி, பார்க்கும் அனவரையும் மெய்மறக்க செய்துவிடும்.வடக்கும்நாதன் கோயிலின் முன் இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும். இந்த இசை நிகழ்ச்சியை, பெருவனம் குட்டன் மரார், மூன்று தலைமுறைக்கும் மேலாக அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில், கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,734 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆகவும் அதிகரித்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 473 ஆகவும் அதிகரித்துள்ளது.மஹாராஷ்டிராவில் 1,135 பேருக்கும், தமிழகத்தில் 738 பேருக்கும்,டில்லியில் 669 பேருக்கும், தெலுங்கானாவில் 427 பேருக்கும், உ.பி.,யில் 361 பேருக்கும், கேரளாவில் 345 பேருக்கும், ராஜஸ்தானில் 381 பேருக்கும் ம.பி.,யில் 229 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் நடத்தப்படும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழா கொரோனா வைரஸ் காரணமாக 58 ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்தாண்டுக்கான விழாவை மே 3-ம் தேதி கொண்டாட திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவலால், நாடு முழுவதும் திருவிழாக்கள், கோயில் நிகழ்வுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு திருவிழாவில் வெறும் பூஜைகள் மட்டு்ம் நடத்த தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.பூரம் கண்காட்சி ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 2 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் திருவிழாவும் ரத்தாகியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா-சீனா போரின் போது இந்த திருவிழா ரத்து செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...