தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன 22 உலோக சிலைகள் மீட்பு : 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…!!!
![தஞ்சாவூர் ஜெயின் கோயிலில் திருட்டு போன 22 உலோக சிலைகள் மீட்பு : 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்…!!!](https://www.jananesan.com/wp-content/uploads/2020/03/JainTemple-Thanjavur-Idols.jpeg)
தஞ்சை கரந்தை பூக்குளம் ஜைன முதலி தெருவில் ஆதீஸ்வரர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஜெயின் சமூகத்தை சேர்ந்தவர்கள் வழிபடும் இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து தரிசனம் செய்வர். இக்கோயிலில் சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இக்கோயில் வழக்கம்போல் நேற்று மாலை பூஜைகள் முடிந்த பின்னர் இரவு கோவிலின் கேட் அடைக்கப்பட்டது. இதையடுத்து ஜனவரி 20 வழக்கம்போல் கோயிலுக்கு வந்தவர்கள் கிரில் கேட் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதில் நேற்று நள்ளிரவில் கோயிலுக்கு வந்த மர்மநபர்கள் காம்பவுன்ட் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்த கேட்டின் பூட்டை உடைத்து கோவிலுக்குள் புகுந்துள்ளனர். பின்னர் உள்ளே காமிரா இருப்பதை கண்ட மர்மநபர்கள் 2 காமிராக்களின் மீது ஸ்பிரே அடித்து நுரையால் மறைத்துள்ளனர். ஒரு காமிராவை கவனிக்காததும் தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்த 3 அடி உயரமுள்ள ஆதீஸ்வரர் ஐம்பொன் சிலை மற்றும் வெண்கலத்தால் ஆன சரஸ்வதி, ஜோலமணி, பஞ்சநதீஸ்வரர், நதீஸ்வரர், மகாவீரர் உள்ளிட்ட வெண்கல எட்டு சிலைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றதும் தெரியவந்தது. கொள்ளையடிக்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ.10 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். கேமராக்களில் பதிவான காட்சிகளைப் பார்த்தபோது, மர்ம நபர்கள் சிலைகளைத் திருடி, வேனில் ஏற்றிச் செல்வது தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தஞ்சாவூர் கரந்தை அருகேயுள்ள சுங்கான்திடல் பகுதியைச் சேர்ந்த சைவராஜ் மகன் சரவணன் என்கிற ராஜேஷ் (40) கைது செய்யப்பட்டார். இவர் கொடுத்த தகவலின் மூலம் கரந்தையைச் சேர்ந்த பி. சண்முகராஜன் (45), சுங்கான்திடல் பெரிய தெருவைச் சேர்ந்த பி. ரவி (45), நாகை மாவட்டம், கீழ்வேளூர் பிராதபுரத்தைச் சேர்ந்த வி. விஜயகோபால் (37) ஆகியோரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், ராஜேஷ் வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 22 உலோகச் சிலைகள் மீட்கப்பட்டன.திருட்டு போன 48 நாட்களுக்குள் இச்சிலைகள் மீட்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்
Leave your comments here...