பொது சிவில் சட்டம்.. ஒரு நாடு ஒரு மாணவர் ஐடி..பொது வாக்காளர் பட்டியல் -பாஜக தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம்

அரசியல்

பொது சிவில் சட்டம்.. ஒரு நாடு ஒரு மாணவர் ஐடி..பொது வாக்காளர் பட்டியல் -பாஜக தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம்

பொது சிவில் சட்டம்.. ஒரு நாடு ஒரு மாணவர் ஐடி..பொது வாக்காளர் பட்டியல் -பாஜக தேர்தல் அறிக்கையில் உத்தரவாதம்

வரும் மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.14) வெளியிட்டார். ‘மோடியின் உத்தரவாதம்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் 14 முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

புதுடெல்லியில் உள்ள பாஜக தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாளான இன்று தனது தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது.தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “ஒட்டுமொத்த நாடும் இந்த ‘சங்கல்ப் பத்ரா’ என்ற பெயர் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கிறது’ என்று தெரிவித்தார். இந்த தேர்தல் அறிக்கை ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கான வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்:

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்தப்படும். அதையொட்டி, நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்

2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்

2025-ம் ஆண்டு பழங்குடிகள் ஆண்டாக கொண்டாடப்படும்.

70 வயதுக்கு மேல் உள்ள மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும்

திருநங்கைகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும்

மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்.

முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

ரேஷனில் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் 5 ஆண்டுக்கு நீட்டிக்கப்படும்.

ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் வந்தே பாரத் ரயில் கொண்டுவரப்படும்

திருவள்ளுவர் கலாச்சார மையங்கள் அமைக்கப்படும்

இந்தியாவின் தெற்கு, வடக்கு, கிழக்கு என மூன்று திசைகளிலும் புல்லட் ரயில் சேவை கொண்டுவரப்படும்

புதிய வந்தே பாரத் மெட்ரோ ரயில்கள் தொடங்கப்படும்

தமிழுக்கு முக்கியத்துவம்: “உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும்” என்று பாஜக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில், “இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், யோகா, ஆயுர்வேதம், இந்திய மொழிகள், பாரம்பரிய இசை ஆகியவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் விதமாக, பயிற்சி அளிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் கலாச்சார மையங்களை நிறுவுவோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் வளமான ஜனநாயக மரபுகளை ஜனநாயகத்தின் தாயாக நினைத்து மேம்படுத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.

– முக்கிய நாடுகளில் யோகா மற்றும் ஆயுர்வேத கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி அதற்கான படிப்புகளை வழங்க நடவடிக்கை.

– இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை.

– உலகெங்கிலும் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் இந்தியாவில் உள்ள செம்மொழிகளை கற்பிக்க நடவடிக்கை.

வெளியுறவுக் கொள்கை: ஐநா அமைப்பில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க முன்னெடுப்பு; பயங்கரவாதத்தை தொடர்ந்து எதிர்ப்போம்.

தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இந்தியாவின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் 3 புல்லட் ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசிய பிரதமர் மோடி:- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான அகமதாபாத் – மும்பை புல்லட் ரயிலின் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அத்திட்டம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இந்த திட்டத்தை போல் வட இந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும், தென்னிந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும், கிழக்கு இந்தியாவில் ஒரு புல்லட் ரயிலும் இயக்கப்படும். இதற்கான கணக்கெடுப்பு பணிகளும் விரைவில் தொடங்கும்” என்று அறிவித்தார்.

508 கிமீ நீளமுள்ள அகமதாபாத் – மும்பை இடையே நாட்டின் முதலாவது புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்த தடத்தில் வரும் 2026-ல் புல்லட் ரயிலை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தேசிய அதிவேக ரயில் கழகம் எனும் நிறுவனம் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது முதல்கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் பங்களிப்புடன், குஜராத்தின் சபர்மதி – மும்பையின் பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்ஸ் இடையே 508 கி.மீ. தூரத்துக்கு புல்லட் ரயில் இயக்க தனி வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

பாஜக தேர்தல் அறிக்கை பொது சிவில் சட்டம்: இதனிடையே பொது சிவில் சட்டம் குறித்து பாஜக தனது தேர்தல் அறிக்கையில், “அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44, மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளில் ஒன்றாக பொது சிவில் சட்டத்தை பட்டியலிடுகிறது. அனைத்து பெண்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் பொது சிவி சட்டத்தை இந்தியா ஏற்றுக்கொள்ளும் வரை பாலின சமத்துவம் இருக்க முடியாது என்று பாஜக நம்புகிறது. எனவே, பொது சிவில் சட்டம் தொடர்பாக பாஜக தனது நிலைப்பாட்டில் மீண்டும் ஒருமுறை உறுதியாக நின்று வலியுறுத்தும்” என்று தெரிவித்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல்: “ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்களை ஆராய்வதற்காக உயர் மட்ட குழுவை அமைத்துள்ளோம். உறுதியாக அந்த குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியுள்ளது.

பொது வாக்காளர் பட்டியல்: இதேபோல், பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும். அனைத்து நிலை தேர்தல்களுக்கும் பொதுவான வாக்காளர் பட்டியலுக்கு நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

ஒரு நாடு, ஒரு மாணவர் ஐடி: கல்வித் தகுதிகள், கிரெடிட் ஸ்கோர்கள் மற்றும் சான்றிதழ்கள் போன்றவற்றைச் சேமித்து வைப்பதற்காக, பிரைமரி முதல் உயர்கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு தானியங்கு நிரந்தரக் கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR) மூலம் ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’யை நூறு சதவீதம் செயல்படுத்துவோம்.” என்றும் பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கைக்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 27 பேர் கொண்ட குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான பணிகள் ஜூன் 4 முதலே தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave your comments here...