அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு – இணையதளத்தில் பதிவேற்றியது தேர்தல் ஆணையம்..!

இந்தியா

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு – இணையதளத்தில் பதிவேற்றியது தேர்தல் ஆணையம்..!

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு –  இணையதளத்தில் பதிவேற்றியது தேர்தல் ஆணையம்..!

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டும் நடைமுறையை மத்திய அரசு 2018-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை எஸ்பிஐ வங்கி வெளியிட்டு வந்தது. ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெற தேவையில்லை.

தேர்தல் பத்திரங்களை பெறும் கட்சிகள், அவற்றை 15 நாட்களுக்குள் தங்கள் கணக்கில் வரவு வைக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரையில் வழங்கப்பட்ட 22,217 தேர்தல் பத்திரங்களில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று கூறி, அந்த நடைமுறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த பிப்ரவரி 15-ம் தேதி உத்தரவிட்டது. 2019 முதல்வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. இதற்கு ஜூன் 30 வரை அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.

கடந்த 11-ம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐயின் கோரிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து தள்ளுபடி செய்ததோடு, தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 12-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதேவேளையில், தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் அதன் இணைய தளத்தில் மார்ச் 15-ம் தேதிக்குள் மக்கள் பார்வைக்காக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு மீண்டும் வரவுள்ள நிலையில் இப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஏப்ரல் 12, 2019 முதல் ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகிய விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதலாவதாக, தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. மற்றொன்றில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. இருப்பினும், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் சேர்த்து இடம்பெறவில்லை.

தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக பெற்று கட்சிகளின் பட்டியலில் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், அதிமுக, திமுக, பாரத் ராஷ்ட்ரிய சமிதி, ஜனசேனா, சிவசேனா, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

எந்தெந்த நிறுவனங்கள்: தேர்தல் பத்திரங்களை தனி நபர்கள், நிறுவனங்கள் வாங்கிய தேதி வாரியாக இடம்பெற்றுள்ள இன்னொரு பட்டியலில் பாரதி ஏர்டெல், வேதாந்தா, முத்தூட், பஜாஜ், உத்தராகண்ட் சுரங்க பணிகளை மேற்கொண்ட நவ யுகா, கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், மேகா இன்ஜினியரிங், பிரமல் எண்டர்பிரைசஸ், டோரண்ட் பவர், டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ், அப்பல்லோ டயர்ஸ், லக்ஷ்மி மிட்டல், எடெல்வீஸ், பிவிஆர், கெவென்டர், சுலா ஒயின், வெல்ஸ்பன் மற்றும் சன் பார்மா ஆகிய எண்ணற்ற நிறுவனங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. Future Gaming And Hotel Services என்ற லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அதிகபட்சமாக ரூ. 1,368 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடையாக வழங்கியது தெரியவந்துள்ளது.

Leave your comments here...