ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு… திரைப்பிரபலங்களுடன் தொடர்பு – கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம்..!

இந்தியா

ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு… திரைப்பிரபலங்களுடன் தொடர்பு – கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம்..!

ரூ.2 ஆயிரம் கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு… திரைப்பிரபலங்களுடன் தொடர்பு – கைதான ஜாபர் சாதிக் வாக்குமூலம்..!

சர்வதேச அளவில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB – என்சிபி) அதிகாரிகள், தமிழகத்தில் திரைப் பிரபலங்கள் சிலருடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் சூடோ பெட்ரின் மூலப்பொருட்கள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு டெல்லியில் இருந்து கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, போதைப் பொருள் தடுப்பு முகமை அதிகாரிகள் மற்றும் டெல்லி போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, டெல்லியில் உள்ள பசாய் தாராபூர் பகுதியில் உள்ள குடோனில் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட சூடோ பெட்ரின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் 3,500 கிலோ எடை கொண்ட சூடோ பெட்ரின் போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியது தெரியவந்தது. ரூ.2,000 கோடி மதிப்பிலான இந்த போதைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு கடத்தியதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது அம்பலமானது.

திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக ஜாபர் சாதிக் இருந்து வந்த நிலையில், அவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டு எழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், போலீசார் தேடுவதை அறிந்த ஜாபர் சாதிக் தலைமறைவாகினார்.

இதையடுத்து, அவரை தேடுப்படும் குற்றவாளியாக அறிவித்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக்குக்கு சொந்தமான மூன்று மாடிகள் கொண்ட வீட்டிற்கு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சீல் வைத்தனர், அத்துடன், அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் கீழ் தளத்தில் உள்ள அலுவலகத்திற்கும் சீல் வைத்தனர்.

இதை தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் கார் ஓட்டுநரை பிடித்து டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கின் இருப்பிடம் குறித்து அவரிடம் விசாரித்து வருவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் ஜாபர் சாதிக் பதுங்கியிருந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போதைப் பொருள் தடுப்பு முகமை மற்றும் டெல்லி போலீசின் சிறப்பு பிரிவு இணைந்து ஜாபர் சாதிக்கை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் அளித்த வாக்குமூலத்தில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புடைய சிலரின் பெயர்களை போலீசிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், போதைப் பொருளின் இருப்பிடம் குறித்த தகவல்களையும் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் விவரித்த போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணை இயக்குநர் ஞானஸ்வர் சிங், “ஜாபர் சாதிக் என்ற பன்னாட்டு போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இவரது முழுப் பெயர் ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான். இவர் டெல்லி, தமிழகம் போன்ற இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லியின் பசாய் தாராபூர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் 50 கிலோ அளவில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 25-ம் தேதி டெல்லி காவல் துறையின் உதவியுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்களின் தலைவர் ஜாபர் சாதிக் என்று தெரிவித்தனர்.

போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படத் தயாரிப்பு, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்ட்டேட், ஹோட்டல் போன்ற பல்வேறு தொழில்கள் முதலீடு செய்துள்ளார். இவருக்கு முக்கியப் பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது.

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஜாபர் சாதிக்கை இன்று (மார்ச் 9) கைது செய்துள்ளோம். போதைப் பொருள் கடத்தல் மூலம் வந்த பணத்தில் ‘மங்கை’ என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப் பொருள்களை ஜாபர் சாதிக் பல்வேறு நாடுகளுக்கு கடத்தியுள்ளார். போதைப் பொருள் கடத்தல் பணத்தை அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியிருப்பதாக தகவல் உள்ளது. போதைப் பொருள் கடத்தல் மூலமாக வந்த பணத்தில் சென்னையில் ஹோட்டல் ஒன்றை தொடங்கியிருக்கிறார்.

ஜாபர் சாதிக் திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். இன்று அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் திரைப் பிரபலங்கள் சிலருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின்னர் அனைவரது பெயர்களையும் வெளியிடுவோம்” என்று அவர் தெரிவித்தார்

Leave your comments here...