கரும்பு கொள்முதல் விலை வரலாற்று உயர்வு.. விவசாயிகள் நலன்களை நிறைவேற்றுவதில் உறுதி – பிரதமர் மோடி

இந்தியா

கரும்பு கொள்முதல் விலை வரலாற்று உயர்வு.. விவசாயிகள் நலன்களை நிறைவேற்றுவதில் உறுதி – பிரதமர் மோடி

கரும்பு கொள்முதல் விலை வரலாற்று உயர்வு.. விவசாயிகள் நலன்களை  நிறைவேற்றுவதில் உறுதி – பிரதமர் மோடி

கரும்பு விலையில் வரலாற்று உயர்வு விவசாயிகள் நலனுக்கான உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் அரசின் உறுதிப்பாட்டை காட்டுவதாக பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.

கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.315-ல் இருந்து ரூ.340 என உயர்த்தி உள்ளது மத்திய அரசு. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் உறுதி செய்துள்ளார்.

அக்டோபர், 2024 முதல் செப்டம்பர், 2025 வரையிலான சர்க்கரைப் பருவத்திற்கான நியாயமான விலை நிர்ணயத்துக்கு இந்த கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு ரூ.340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 சதவீத பிழிதிறன் அதிகரிப்புக்கு குவிண்டாலுக்கு ரூ.3.32 உயர்த்தி வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் 5 கோடி கரும்பு விவசாயிகள் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கரும்பு விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதை கருத்தில்கொண்டு 9.5 சதவீத சர்க்கரை கட்டுமானத்திற்கும் கீழே உள்ள கரும்புக்கு எந்தவித விலைக் குறைப்பும் செய்யக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது. அத்தகைய விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ.315.10 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2023-24 சர்க்கரைப் பருவத்தில் குவிண்டாலுக்கு ரூ.315 வழங்கப்படுகிறது.

மேலும், கடந்த 10 ஆண்டு காலமாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பயிர்களுக்கான உரிய விலையை தகுந்த நேரத்தில் விவசாயிகள் பெறுவதை உறுதி செய்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய சர்க்கரை பருவமான 2022-23ல் 99.5% கரும்பு நிலுவைத் தொகையும், மற்ற அனைத்து சர்க்கரை பருவங்களில் 99.9% கரும்பு நிலுவைத் தொகையும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவுகளைச் சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இன்று தொடர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “நாட்டிலுள்ள அனைத்து விவசாய சகோதர, சகோதரிகளின் நலன்கள் தொடர்பான ஒவ்வொரு தீர்மானங்களை நிறைவேற்றுவதிலும் எங்களின் அரசு உறுதிபூண்டுள்ளது. இதன் அடிப்படையில் கரும்பு கொள்முதலில் வரலாற்று விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கோடிக்கணக்கான கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவு குறித்த மற்றொரு பதிவில், “தேசிய கால்நடை இயக்கம் தொடர்பான முடிவு தீவன உற்பத்தி மற்றும் இன பாதுகாப்பில் ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளை தொழில் முனைவோருக்கு வழங்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய கால்நடை இயக்கத்தை மத்திய அரசு நேற்று மாற்றி அமைத்துள்ளது. இதன்படி, குதிரை, கழுதை மற்றும் ஒட்டகம் தொழில்முனைவை நிறுவுவதற்காக தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேலும், செயற்கைக்கோள் உதிரி பாகங்கள் தயாரிப்பில் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் தனியார் பங்களிப்பை ஈர்க்கும் வகையில் விண்வெளி துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட பதிவில் பிரதமர், “வளர்ச்சி மற்றும் புதுமைக்கான சுற்றுப்பாதைக்கு வழிவகுக்கும் வகையில் எங்களது அரசு வாய்ப்புகளின் உலகிற்கு பாதையமைக்கும் வகையில் விண்வெளித்துறையில் நேரடி அந்நிய முதலீட்டு திட்டத்தை புதுப்பித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Leave your comments here...