தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் – சிறப்பம்சங்கள்…!

தமிழகம்

தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் – சிறப்பம்சங்கள்…!

தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் – சிறப்பம்சங்கள்…!

 


சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

“காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தொடர்ந்து அவர் ஆற்றிய அறிமுக உரையில், “நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த பட்ஜெட், தமிழர்களை தலைநிமிர செய்தது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற்றிடும் வகையில் பட்ஜெட் உரை அமையும். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நில பரப்பில் அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கை பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபக்கம். இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளன” என்றார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும்.

மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதிகரிப்பு.

மதி இறுக்கம் (Autism) உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மையம்.

‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ், விபந்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.

500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்.

விரைவான வானிலை முன்னறிவிப்புகளை பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு.

வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றை கண்காணித்து பேரிடர் அபாய அளவை குறைக்க தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்.

வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமாநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இதில் இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனப்போட்டிகள் நடத்தப்படும்.

திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும்.

சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.24,000 கோடி ஒதுக்கீடு.

சமூக பாதுகாப்புத் துறை குழந்தைகள் நலன் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.

கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும்.

வேப்பூர் (கடலூர் மாவட்டம்), குஜிலியம்பாறை (திண்டுக்கல் மாவட்டம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்), கூத்தாநல்லூர் (திருவாரூர் மாவட்டம்), செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), ஏரல் (தூத்துக்குடி மாவட்டம்) ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.

பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புனரமைப்புத் திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.

சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்.

கடந்த 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத சரக்கு பெட்டகம் மேம்படுத்தப்படும்

ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்

சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை அமைக்கப்படும்.

திண்டுக்கல் நகருக்கு புறவழி சாலை அமைக்கப்படும்.

அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்துப்படும்.

சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு வழி உயர்மட்ட வழித்தடம் அமைக்க ஆராயப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் ரூ.36 கோடியில் திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்படும்.

> தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த முக்கிய சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரு சட்டபூர்வ அமைப்பு உருவாக்க திட்டம். இது தொடர்பாக நடப்பு கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு அறிமுகம்.

மெரினா, கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.

தமிழகத்தில் கடற்கரைகளை மேம்படுத்த நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ் திட்டம் அறிமுகம்.

தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.

அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் திட்டத்துக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு.

1000 ஆண்டுகள் பழமையான கோயில்களின் திருப்பணிகளுக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு.

திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மையம் மேம்படுத்தப்படும்.

தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும்.

கடலோர வளங்களை மீட்டெடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும்.

அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த ரூ.1,675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம். சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.

ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.

தமிழகத்தில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.

சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம்படுத்தப்படும்.

பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்டப்பணிகளுக்கு ரூ.7,890 கோடி நிதி ஒதுக்கீடு. இத்திட்டம் மூலம் சுமார் 40 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.

குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.

தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும்

மதுரையில் 25,000 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்.

கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

முதல்வர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்கப்படும்.

பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்கப்படும்.

மருத்துவத் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.

4 நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும்.

மதுரையில் ரூ.345 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.

திருச்சியில் ரூ.350 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.

‘தமிழ்ப் புதல்வன்’ என்ற புதிய திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு.

பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு.

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு.

விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.

தமிழகத்தில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.

சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப்படும்.

நான் முதல்வர் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

நான் முதல்வர் திட்டத்தில் 100 கலை, பொறியியல் கல்லூரிகளில் ரூ.200 கோடிக்கு திறன் ஆய்வகங்கள்.

மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.

சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.

மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் 1,000 நபர்களுக்கு ஆறு மாத உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.

சிப்காட் பகுதியில் பணிபுரியும் பெண்களின் குழந்தைகள் பாதுகாப்புக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்படும்.

பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப்படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

உயர் கல்வித் துறைக்கு ரூ.8.212 கோடி நிதி ஒதுக்கீடு.

தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.

ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய ஐடி பூங்கா. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அதிகரிக்கப்படும்.

கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.

நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு

புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு.

அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக் கல்வி துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு.

மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்வி மற்றும் விடுதிகள் கட்டணத்தை அரசே ஏற்கும்.

ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். பேராசிரியர் அன்பழகன் திட்டம் என்கிற பெயரில் இது செயல்படுத்தப்படும்.

ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.

> சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்தப்படும்.

தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.

தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.

முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.

கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.

கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.

சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.

விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

ரூ.1,000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.

2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.

‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.

> நிதி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.

குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.

சிங்காரச் சென்னை 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு

சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு

வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு

பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.

அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு.

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.

கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.

மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

Leave your comments here...