உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்… போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தற்காலிக வாபஸ்..!

தமிழகம்

உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்… போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தற்காலிக வாபஸ்..!

உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்… போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் – தற்காலிக வாபஸ்..!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாக தமிழகம் முழுவதும் நடந்துவரும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை வரும் ஜன.19-ம் தேதி வரை நிறுத்திவைப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த டி.ஃபார்ம் படிக்கும் மாணவர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நிலுவையில் கோரிக்கைகளை வலியுறுத்தி, பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என அறிவித்து, போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், “தமிழக அரசு பொதுமக்கள், தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அரசு பணியாளர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. இந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரை, 7,000 போக்குவரத்து தொழிலாளர்களா? இல்லை பொதுமக்களா? என்ற நிலை நீடித்து வருகிறது.

எனவே, போக்குவரத்து தொழிலாளர்கள் பொதுமக்களின் நலனை கருத்தில்கொண்டு இந்த போராட்டத்தை கைவிட வேண்டும். ஏற்கெனவே நிர்ணயித்தப்படி, வரும் 19-ம் தேதி அரசு தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த அகவிலைப்படி தொடர்பாக விவாதிக்கப்படும். மேலும், அகவிலைப்படி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 6-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. எனவே, தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதனை ஏற்காமல், தொழிற்சங்கத்தின் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள். இன்று அதிகாரிகளை தங்களது பணிகளை மேற்கொள்ள விடாமல், இடையூறு ஏற்படுத்தி அவர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர்” என்று வாதிட்டார்.

அப்போது போக்குவரத்து தொழிற்சங்கங்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “அரசு தரப்பில், கடந்த 2014-ம் ஆண்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. மேலும், கடந்த 10 ஆண்டுகளாக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, இந்த ஜனவரி மாதத்துக்குள் அந்த தொகையை டெபாசிட்ட செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்படவுள்ளது. ஏற்கெனவே அரசும் 19-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே, பொங்கல் பண்டிகை முடியும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை ஏன் தள்ளிவைக்கக் கூடாது?” என்று தொழிற்சங்கங்களுக்கு கேள்வி எழுப்பினார்.

அதேபோல், “92,000 ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். தற்காலிகமாக அவர்களுக்கு ரூ.2,000 வழங்கிவிட்டு, பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மீதித் தொகையை டெபாசிட் செய்ய முடியுமா?” என்று அரசு தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். ஆனால், தொழிற்சங்கமும், அரசும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். இதற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளது. ஜனவரி 19ல் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால் அதுவரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த பஸ் தொழிலாளர்களின் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது.

சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி ;- மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம் என்று சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை பல்லவன் சாலையில் உள்ள அலுவலகத்தில் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யூ., அண்ணா தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலார்களின் ஸ்டிரைக்கை தாற்காலிகமாக நிறுத்தி வைக்க தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்

Leave your comments here...