நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் அமைத்து வழிபட்டு வரும் ரசிகர்..!

தமிழகம்

நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் அமைத்து வழிபட்டு வரும் ரசிகர்..!

நடிகர் ரஜினிகாந்துக்கு கோயில் அமைத்து வழிபட்டு வரும் ரசிகர்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ரஜினிகாந்தை அவரது ரசிகர்கள் தங்களின் குலதெய்வமாகவும் பார்ப்பதாக கூறுவது உண்டு. ஆனால்., இங்கு வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல, உண்மையிலேயே ரஜினியை குலதெய்வமாக கருதி அவருக்காக பூஜை அறை அமைத்து தினந்தோறும் பூஜை செய்துவரும் வித்தியாசமான ரசிகர் ஒருவரும் உள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல, மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர்தான். 40வயதாகும் கார்த்திக் துணை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மதுரை திருமங்கலத்தில் தனியார் திருமண தகவல் மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் திருமண தகவல் மையம் நடத்தி வந்தாலும், நடிகர் ரஜினிகாந்தின் தீவிர பக்தராகவும் இருந்து வருகிறார்.

ரஜினிகாந்த் மேல் கொண்ட பக்தியின் காரணமாக திருமங்கலத்தில் உள்ள தனது அலுவலகத்தில் ஒரு அறையை பூஜை அறையாக வடிவமைத்து, அந்த அறைக்குள் அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் வரை நடிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த திரைப்படங்களின் புகைப்படங்கள் அனைத்தையும் சுவர் முழுவதும் ஒட்டி வைத்து திரும்பும் திசையெல்லாம் ரஜினிகாந்த் முகம் தெரியும் அளவிற்கு கோவிலை வடிவமைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நடிகர் ரஜினிக்காக தினந்தோறும் காலை மாலை என இரண்டு வேளையும் 6 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்து ரஜினிகாந்தை வழிபட்டு வருகிறார்.

இந்த நிலையில், ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு, அவர் தொடர்ந்து நீடூடி வாழ வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் திருவுருவப்படத்திற்கு பால், சந்தனம், தயிர், விபூதி, பன்னீர், இளநீர் என பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு, சூடம் ஏற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தார். இந்த வழிபாட்டில் அவரது அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இது குறித்து கார்த்திக் போசுகையில், நான் சிறுவனாக இருந்தபோது ரஜினி நடித்த மாவீரன் திரைப்படம் வெளியானது. அதிலிருந்து தனக்கு ரஜினியை மிகவும் பிடிக்கும். மாவீரன் படத்திலிருந்து இன்று வரை எல்லா திரைப்படங்களையும் பார்த்து வருகிறேன். அவருடைய கடின உழைப்பால் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஸ்டார் ஆக உயர்ந்து இன்றைக்கு நான்கு தலைமுறைகளை கடந்து இன்னும் அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறார். ரஜினிகாந்த் மீது கொண்ட அன்பின் காரணமாகவே அவருக்கென்று தனி கோவில் அமைத்து தினம் தோறும் பூஜை செய்து வருவதாக தெரிவித்தார்.

நாங்களும் ஆரம்பத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தான் வருகிறோம். ரஜினிகாந்த் எதிரில் உள்ள நடிகர்களின் பெயர் மாறிக்கொண்டே தான் இருக்கும். ஆனால் இன்று வரை அவருக்கு நிகரான நடிகர்கள் வேறு யாரையும் இதுவரை பார்த்ததே கிடையாது. அடுத்து சூப்பர் ஸ்டார் என்று பேச்சுக்கே இடம் கிடையாது. தமிழ்நாடு மட்டும் இல்ல உலகத்துக்கே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும்தான். அவருக்கு போட்டி என்பது கிடையவே கிடையாது. இமயமலைக்கு அவர் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். கொரோனா காரணமாக நான்கு வருடங்களாக அவர் செல்லவில்லை. இன்று அவர் சென்று இருப்பது எங்களுக்கு மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சி அளிக்கிறது. 5 ஆண்டுகளாக ரஜினியை நேரில் சந்திக்க கடிதம் எழுதி இன்றுவரை அழைப்பு வரவில்லை. ஆனால்., நிச்சயம் தலைவர் என்னை அழைப்பார் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ரஜினிகாந்தை தலைவனாக ஏற்று கொண்டாடி வரும் ரசிகர்கள் மத்தியில் அவரை குலதெய்வமாக நினைத்து தனது குடும்பத்துடன் தினந்தோறும் பூஜை செய்து வரும் இவரு செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave your comments here...