திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல் – 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

தமிழகம்

திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல் – 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

திருப்பதியில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் கடத்தல் – 8 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி மீனா. இவர்களது மகன் அருள்முருகன் (வயது 2). இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றனர்.

கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் 2 நாட்கள் தங்கி இருந்து நேற்று சாமி தரிசனம் செய்தனர். இரவு சென்னை திரும்புவதற்காக திருப்பதி மலையில் இருந்து கீழ் திருப்பதிக்கு வந்தனர். அங்குள்ள ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் சென்னை பஸ்கள் நிற்கும் இடத்திற்கு வந்தனர்.நள்ளிரவு ஆனதால் சென்னைக்கு பஸ்கள் இல்லை.

இதனால் சந்திரசேகர், மீனா இருவரும் அவர்களது மகன் அருள் முருகனை அருகில் படுக்க வைத்துக்கொண்டு பஸ் நிலையத்தில் தூங்கினர்.நள்ளிரவு மர்மநபர் ஒருவர் தாயின் அருகில் படுத்திருந்த குழந்தை அருள் முருகனை நைசாக தோளில் தூக்கி கடத்திச் சென்று விட்டார்.சிறிது நேரத்தில் கண்விழித்த மீனா அருகில் இருந்த குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். அவரும், கணவரும் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குழந்தையை தேடினர்.அங்கிருந்தவர்கள் குழந்தையை ஒருவர் தூக்கிச் சென்றதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கதறி அழுதபடி திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர். உடனடியாக திருப்பதி மாநகர் பகுதி முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.திருப்பதி பஸ் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அதில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தோளில் சுமந்தபடி தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.  அதில் நள்ளிரவு 2.10 மணியளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.இதையடுத்து 5 தனிப்படைகளை அமைத்து ஆந்திர போலீசார், குழந்தையை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.மர்மநபர் குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சிகளை வைத்து தொடர்ந்து கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது ஏரிபேடு மண்டலம் பகுதியில் குழந்தையுடன் மர்மநபர் சென்றது அந்த பகுதியில் உள்ள கேமராக்களில் பதிவாகி இருந்தது. இதன் மூலம் அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சிறுவனின் போட்டோவை காண்பித்து விசாரிக்க தொடங்கினர்.அப்போது மாதவமலை பகுதியில் உள்ள ஒரு பெண் வீட்டில் குழந்தை இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு சென்று பார்த்தனர்.அப்போது குழந்தை அருள் முருகன் ஒரு பெண்ணிடம் இருந்தான். இதனை கண்டதும் போலீசார் பெண்ணை மடக்கி பிடித்தனர். மேலும் சிறுவனை அவரிடம் இருந்து மீட்டனர். குழந்தை கடத்தப்பட்ட 8 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.விசாரணையில் குழந்தையை மாத மலையை சேர்ந்த சுதாகர் என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.விசாரணையில் சுதாகர் குழந்தையை கடத்திச் சென்று பின்னர் மாதவமலையில் உள்ள தனது சகோதரியின் வீட்டில் குழந்தையை மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்நிலையில் குழந்தையை மீட்ட போலீசார் சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். மீட்கப்பட்ட குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கண்டதும் அவரது தாயார் ஓடி சென்று கட்டி அணைத்து தூக்கி கதறி அழுதார்.அவர்கள் கண்ணீர் மல்க போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave your comments here...