‘ஈஷா கிராமோத்சவம்’: லட்சங்களில் பரிசுகள் வெல்ல கோவை இளைஞர்களுக்கு வாய்ப்பு..!

தமிழகம்விளையாட்டு

‘ஈஷா கிராமோத்சவம்’: லட்சங்களில் பரிசுகள் வெல்ல கோவை இளைஞர்களுக்கு வாய்ப்பு..!

‘ஈஷா கிராமோத்சவம்’: லட்சங்களில் பரிசுகள் வெல்ல கோவை  இளைஞர்களுக்கு வாய்ப்பு..!

மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு போட்டிகள் வரும் கோவையில் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெற்றது. இதில் ‘ஈஷா கிராமோத்சவம்’ குழுவின் கள ஒருங்கிணைப்பாளர் ஸ்வாமி நகுஜா அவர்கள் பங்கேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈஷா அவுட்ரீச் சார்பில் நடத்தப்படும் 15-வது ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் மட்டும் 150 கிராம பஞ்சாயத்துக்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட அணிகளும், 2,600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் 120 அணிகளும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் 60 அணிகளும், ஆண்களுக்கான கபாடி போட்டியில் 60 அணிகளும், பெண்களுக்கான் கபாடி போட்டியில் 15 அணிகளும் பங்கேற்க உள்ளன.

முதல்கட்டமாக, கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் தொண்டாமுத்தூர், சூலூர், கரடிமடை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. வாலிபால் மற்றும் த்ரோபால் போட்டிகள் ஆக.12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும், கபாடி போட்டிகள் ஆக.26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.

டிவிஸினல் போட்டிகளை தொடர்ந்து தென்னிந்திய அளவில் நடத்தப்படும் இறுதிப்போட்டிகள் சத்குரு மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஆதியோகி முன்பு செப்.23-ம் தேதி மிக பிரமாண்டமாக நடத்தப்படும்.

இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு வாலிபால் (ஆண்கள்) – ரூ.5 லட்சம், த்ரோபால் (பெண்கள்) – ரூ. 2 லட்சம், கபாடி (ஆண்கள்) – ரூ.5 லட்சம், கபாடி (பெண்கள்) – ரூ.2 லட்சம் பரிசு தொகைகள் வழங்கப்படும். மேலும், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடங்களில் அணியில் இடம்பெறாத மக்கள் பங்கேற்று மகிழ்வதற்காக பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது.

இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் https://isha.co/gramotsavam-tamil என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 83000 30999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இத்திருவிழாவை நடத்தும் ஈஷா அவுட்ரீச் அமைப்பு, மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையிடம் இருந்து தேசிய விளையாட்டு ஊக்குவிப்பு அமைப்பு (National Sports Promotion Organization) என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளது. மேலும், 2018-ம் ஆண்டு ‘ராஷ்ட்ரிய கேல் புரோத்சாஹன் புரஸ்கார்’ என்ற உயரிய விருதை அப்போதைய மாண்புமிகு பாரத குடியரசு தலைவர், ஈஷா அவுட்ரீச்சிற்கு வழங்கி கெளரவித்துள்ளார்.

மேலும், இத்திருவிழாவின் இறுதிப் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ், பி.வி.சிந்து, ஷிகர் தவான், வீரேந்திர சேவாக் போன்ற விளையாட்டு துறை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...