கருணாநிதி 100’-க்காக அதிக நிதி – அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கும் ஊழல் திமுக அரசு – அண்ணாமலை

தமிழகம்

கருணாநிதி 100’-க்காக அதிக நிதி – அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கும் ஊழல் திமுக அரசு – அண்ணாமலை

கருணாநிதி 100’-க்காக அதிக நிதி – அரசுப்பள்ளி மாணவர்களை வஞ்சிக்கும் ஊழல் திமுக அரசு – அண்ணாமலை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாட, பெருமளவில் நிதி ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உபகரணங்களை வழங்காமல் அலைக்கழிக்கிறதா தமிழக அரசு? அரசுப் பணத்தை எதற்குச் செலவிட வேண்டும் என்பதையே இவர்கள் உணரவில்லை” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய புத்தகப்பை மற்றும் காலணிகள் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், மாணவர்களுக்கான சீருடை ஒன்று மட்டுமே வழங்கியிருப்பதால், தினமும் சீருடை அணிய முடியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வரும் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

மேலும், ஒரு சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள் மாணவர்களுக்குப் பொருந்தும் அளவிலும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றான, மாணவர்களுக்கான உபகரணங்கள், குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை ஏன் உறுதி செய்யவில்லை?.

கடந்த ஆண்டும் இதுபோல காலதாமதமாக, ஆண்டு இறுதியில் உபகரணங்கள் வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாமலேயே போய்விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக் கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், அமைச்சருக்கும், பாடநூல் கழகத்துக்கும் மாணவர்களின் நலனை விட கோபாலபுர குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவதே முக்கியமாகப் போய்விட்டது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூறாவது பிறந்த நாளைக் கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் பன்னிரண்டு கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் 3 முதல் 4 கோடி ரூபாய் செலவிடப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. பெருமளவில் நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உபகரணங்களை வழங்காமல் அலைக்கழிக்கிறதா தமிழக அரசு? அரசுப் பணத்தை எதற்குச் செலவிட வேண்டும் என்பதையே இவர்கள் உணரவில்லை.

ஆட்சிக்கு வந்ததும், பத்தாயிரம் சிதிலமடைந்த அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். பள்ளிக் கல்வித் துறை அமைச்சரிடம், இந்த புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளனவா என்று ஓர் ஆண்டுக்கும் மேலாக கேட்டும் இன்னும் பதில் வரவில்லை. எது எதற்கோ, எண்பது கோடி, நூறு கோடி என வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள் ஆனால், நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனம் வரவில்லை, இந்த ஊழல் திமுக அரசுக்கு.

மாணவர்களுக்கு சீருடை, காலணிகள், புத்தகப்பை உள்ளிட்டவற்றைக் குறித்த நேரத்தில் வழங்குவது தமிழக அரசின் கடமை என்பதை, அமைச்சரும் பாடநூல் கழகமும் உணர்ந்திருக்க வேண்டும். கோபாலபுரக் குடும்பத்தின் புகழ்பாடும் கடமைகள் காத்திருக்கலாம். மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கான சீருடை, காலணிகள் உள்ளிட்டவை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...