அரசியலுக்காக கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் – வானதி சீனிவாசன் விமர்சனம்..!

அரசியல்

அரசியலுக்காக கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் – வானதி சீனிவாசன் விமர்சனம்..!

அரசியலுக்காக கிறிஸ்தவராக மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் – வானதி சீனிவாசன் விமர்சனம்..!

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீர்மானம் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட தீர்மானம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூக நீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்த முதல்வர் ஸ்டாலின், “மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூக நீதியை மறுப்பது சரியாகாது. சமூக நீதியானது சம நீதியாக வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: “கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களையும் பட்டியலில் சேர்த்து, அந்தப் பட்டியலின மக்களுக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை இந்த மாமன்றத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.

ஆதி திராவிடர்களாக இருந்து மதம் மாறிய பின்னரும் தீண்டாமை உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளுக்கு அவர்கள் ஆளாவது தொடரவே செய்கிறது. எனவே இதனை கனிவோடு நாம் கவனிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நமது நாட்டின் அரசியல் சட்டப்படி இந்து, சீக்கியர், பௌத்த மத்தைத் தவிர்த்த பிற மதங்களைச் சேர்ந்த யாரும் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவராகக் கருதப்பட முடியாது. வரலாற்று ரீதியாகவே அவர்கள் ஆதி திராவிடர் வகுப்பினராக இருக்கும்போது, அவர்களுக்குப் பட்டியலின வகுப்புக்கான உரிமைகளை வழங்குவதே சரியானதாக இருக்கும். அதன் மூலமாகத்தான் அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை கிடைக்கும்.

அதன் மூலமாக சமூகத்தில் அவர்களுக்கான உயர்வும், மேம்பாடும் கிடைக்கும். மதம் மாறிவிட்டார்கள் என்பதற்காக சமூகரீதியாக அவர்களுக்குத் தரப்பட்டு வந்த, அதே சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அனுபவித்து வரும் உரிமைகளை இவர்களுக்குத் தர மறுப்பது சரியல்ல என்பதுதான் நமது நிலைப்பாடு.மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி என்பது மாறுதலுக்கு உட்பட்டது அல்ல.இத்தகைய சாதி என்பது நீ வேறு; நான் வேறு என்பதாக இல்லாமல், நான் உயர்ந்தவன்; நீ தாழ்ந்தவன் என்ற முறையில் இருக்கிறது. அதாவது படுக்கைக் கோடாக இல்லாமல், செங்குத்துக் கோடாக இருக்கிறது. மொத்தத்தில் அது சமூகக் கேடாக அமைந்துள்ளது. சாதிய ஏற்றத்தாழ்வை வைத்து எந்த வகையில் அடக்கி ஒடுக்கினார்களோ, அதே சாதியை வைத்தே இட ஒதுக்கீடு வழங்கி உயர்வடைய வைக்கும் தத்துவம்தான் சமூகநீதித் தத்துவம். இந்த சமூகநீதித் தத்துவத்தை அனைத்து வகையிலும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே திராவிட மாடல் அரசினுடைய நோக்கம்.

அந்த வகையில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கும், அரசியல் சட்ட சமூக நீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு. முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதெல்லாம், 1996, 2006, 2010, 2011 ஆகிய காலக்கட்டங்களில் இதே கோரிக்கையினை நிறைவேற்ற பிரதமருக்கு நேர்முகக் கடிதம் எழுதி, ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தியிருக்கிறார். இதே பேரவையில், ஒன்றிய அரசிடம் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்படும் என்று 6-1-2011 அன்று ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதனை வலியுறுத்தி இருந்தோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்.பட்டியலின மக்களுக்கு இணையாக கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களும் சலுகைகள் பெறும் வகையில் அரசாணைகள் வெளியிட்டு உரிய பயன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இடஒதுக்கீடு நீங்கலாக மற்ற உரிமைகள் தரப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசால் பட்டியலின மக்களுக்கு வழங்கப்படும் அனைத்துக் கல்வி உதவித் தொகைத் திட்டங்களும் கிறித்துவ ஆதிதிராவிடர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முழுநேர முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை, வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில்பவர்களுக்கான ஊக்கத்தொகை, உயர்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை அனைத்தும் இவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இத்துடன் இடஒதுக்கீட்டையும் வழங்குவதே சரியானதாகவும் முறையானதாகவும் இருக்கும் என்று நினைக்கிறோம்.

அரசியலமைப்பு (பட்டியலின சாதிகள்) திருத்த ஆணை 1950-ன்படி, இந்து மதத்தில் இருந்து வேறுபட்ட மதத்தைக் கூறும் எவரும் அட்டவணை சாதிகளின் உறுப்பினராக ஆக முடியாது. ஆனால், 1956 ஆம் ஆண்டு சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களையும், 1990 ஆம் ஆண்டு பவுத்த மதத்தைப் பின்பற்றுபவர்களையும், பட்டியல் சாதியினராகச் சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது. இதே போன்ற திருத்தத்தைத்தான் கிறித்தவர்களாக மதம் மாறிய

ஆதி திராவிடர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்தக் கோரிக்கையை பல்வேறு தரப்பினரும் அரசுக்கு வைத்திருக்கிறார்கள். ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதி திராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறி விடுகிறார்கள் என்றும்; மதம் மாறிய பின்னும் அவர்களுக்கு ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதிச் சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்றும்; மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலிச் சான்றிதழ் என்றும்; தேசிய ஆதி திராவிடர் ஆணையத் துணைத் தலைவர் கடந்த ஆண்டு சொல்லி இருந்தார்.

அப்போது பல்வேறு தரப்பினரும் இதற்குக் கடுமையாக எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆணையம் ஒன்றை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையம் இந்தியா முழுமையும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து மாநிலங்களின் கருத்தையும் பெற்ற பிறகே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை வலியுறுத்தும் வகையில், பின்வரும் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

தீர்மானம்: “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளைக் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் விரிவுபடுத்தி, அவர்களும் அனைத்து வகையிலும் சமூகநீதியின் பயன்களைப் பெற, அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு இந்திய அரசை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது” என்ற இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிகிறேன்.

சமூக நீதியானது சம நீதியாக வழங்கப்பட வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தீர்மானத்தை அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானத்தின் மீது வானதி சீனிவாசன் பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதால் பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “சட்டப்பேரவையில் அரசினருடைய தனித் தீர்மானம் ஒன்றை முதல்வர் தாக்கல் செய்தார். கிறிஸ்தவம், இஸ்லாத்திற்கு மதம் மாறிய ஆதி திராவிடர் சமுதாய மக்களுக்கு அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்கெனவே பட்டியலினத்தவர் அனுபவித்து வரும் இட ஒதுக்கீடு பலனைக் கொடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் நாங்கள் சில கருத்துகளை முன்வைத்திருக்கிறோம். இம்மாதிரியான மதம் மாறிய பட்டியலினத்தைச் சார்ந்தவர்கள் அரசாங்கத்துடைய இட ஒதுக்கீடு சலுகையை ஆராய்வதற்காக மத்தியிலேயே உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2022-ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு இது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது.

அடுத்ததாக, மதம் மாறியதற்காக சலுகைகள் வழங்காதது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அவர்களுக்கு இந்த உரிமை கிடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுளது. அதன் மீதும் விசாரணை நடந்து வருகிறது. அடுத்த விசாரணை ஜூலையில் நடைபெறவுள்ளது. அப்படியிருக்க, நீதிமன்ற வரம்பில் இருக்கும் விஷயத்தைப் பற்றி எதற்காக இந்தத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கேள்வியை பாஜக முன்வைக்கிறது.

கிறிஸ்தவத்துக்கும், இஸ்லாத்துக்கும் மதம் மாறினால் கூட தொடர்ச்சியாக பட்டியலின மக்களுக்கு தீண்டாமை கொடுமை நடைபெற்று வருகிறது என்பதை இந்தத் தீர்மானம் மறைமுகமாக சொல்ல வருகிறதா என்பதை நாங்கள் முதல்வரிடம் கேள்வியாக எழுப்பினோம்.

அதுமட்டுமல்லாமல் பட்டியலின மக்களின் மேம்பாட்டுக்காக சமூக நீதி அரசு, திராவிட மாடல் அரசு நாங்கள் நடத்துகிறோம் என்று சொல்கின்ற திமுக அரசு வேங்கைவயல் பிரச்சினை, பஞ்சமி நில ஆக்கிரமிப்பு தடுப்புச் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் முழுக்க முழுக்க அரசியல் நோக்கத்திற்காக இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக பாஜக கருதுகிறது. அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

மாநில அரசின் வரம்பில் உள்ள மயானம், ஆணவக் கொலைகள் தடுப்பு, பஞ்சமி நிலம் மீட்பு ஆகிய பிரச்சினைகளில் கூட அந்த மக்களை ஏமாற்றிவிட்டு, அவர்களுக்கு துரோகம் செய்துவிட்டு இப்போது அரசியல் நோக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்” என்றார்.

Leave your comments here...