கோவை கார் வெடிப்பு : சென்னை உள்பட தமிழகத்தின் 40 இடங்களில் என்ஐஏ சோதனை..!

தமிழகம்

கோவை கார் வெடிப்பு : சென்னை உள்பட தமிழகத்தின் 40 இடங்களில் என்ஐஏ சோதனை..!

கோவை கார் வெடிப்பு : சென்னை உள்பட தமிழகத்தின் 40 இடங்களில் என்ஐஏ சோதனை..!

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பழனி நெய்க்காரப்பட்டியில் நடைபெற்ற சோதனையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவரின் வீட்டில் இருந்து ஹார்ட் டிஸ்க் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகிகள் மற்றும் அவர்களது வீடுகளில் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந்தேதி கார் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவன் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முபின் ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததும், கோவையில் நாசவேலையை அரங்கேற்றும் நோக்கத்தில் இந்த செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ அதிகாரிகள் கோவையிலேயே முகாமிட்டு, கார் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், சேக் இதயத்துல்லா, சனோபர் அலி ஆகிய 11 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் ஐ.எஸ். தொடர்புடையவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்களின் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா என மொத்தம் 40 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை, மயிலாடுதுறை என 40 இடங்களில் சோதனை நடக்கிறது. இதில் கோவையில் மட்டும் கோவை கோட்டைமேடு, புல்லுக்காடு, உக்கடம், பிருந்தாவன் நகர், பாரத் நகர், குனியமுத்தூர், டி.கே.செட்டி வீதி, வசந்தா நகர் என 15 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இந்த வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களின் வீடுகளில் 16 பேர் கொண்ட என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் இந்த சோதனையானது நடந்து வருகிறது. சோதனையின் போது வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டின் கதவுகளை பூட்டி கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்தனர்.

இதபோல் பொள்ளாச்சியில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த சையது ரகுமான் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சிக்கியுள்ளன. பழனி அடுத்துள்ள நெய்க்காரபட்டியைச் சேர்ந்த ராஜா முகமது, 35 என்பவர் வீட்டிலும் இன்று சோதனை நடைபெற்றது. இவர் தனது தந்தையுடன் அதே பகுதியில் வசித்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை அவரது வீட்டுக்கு உள்ளூர் போலீசாருடன் வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த மாதம் இதே பகுதியைச் சேர்ந்த டீ மாஸ்டரான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் நிர்வாகியிடமும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...