செவிலியர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

சினிமா துளிகள்

செவிலியர் குறித்து சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்டார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

செவிலியர் குறித்து   சர்ச்சை கருத்து – மன்னிப்பு கேட்டார் தெலுங்கு  நடிகர் பாலகிருஷ்ணா

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா அடிக்கடி ஏதாவது செய்து அல்லது பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். ஒரு நிகழ்ச்சியில் புகைப்படம் எடுக்க செல்போனை ஒருவர் கொடுத்த போது, அதைத் தூக்கி எறிந்தார்.

பின்பு மற்றொரு நிகழ்ச்சியில் அவருடன் போட்டோ எடுக்க குழந்தையுடன் ஒரு ரசிகர் சென்ற நிலையில், அந்தக் குழந்தையை விளையாட்டாக அடித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்தின் சக்சஸ் மீட்டில் பாலகிருஷ்ணா கையில் மது கோப்பையுடன் நடிகை ஹனிரோசுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, தெலுங்கு திரையுலகில் பழம்பெரும் நடிகரும் முக்கிய ஆளுமைகளுள் ஒருவருமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் பெயரைக் குறிப்பிட்டு பேச்சுவழக்கில் மரியாதை குறைவாகப் பேசினார். இதனால் கண்டனம் வலுக்கவே மன்னிப்பு கோரினார். தற்போது அவர் செவிலியர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் அன்ஸ்டாப்பபிள் நிகழ்ச்சியில் விருந்தினராக ஜன சேனா தலைவர் பவன் கல்யாண் வந்திருந்தார். பவன் கல்யாண் உடனான உரையாடலில், நந்தமுரி பாலகிருஷ்ணா, பழைய விபத்து ஒன்றை நினைவு கூர்ந்தார். ஆனால் ‘அழகான’ நர்ஸைப் பார்த்ததும், “தினம்மா பலேக உண்டி அக்காடி நர்ஸ் (அந்த நர்ஸ் ரொம்ப கவர்ச்சியாக)” என்ற உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை என கூறினார்.

இதை தொடர்ந்து செவிலியர்கள் பாலகிருஷ்ணா அந்த நிகழ்ச்சியில் தங்களை அவமதித்ததாக குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டை அடுத்து நந்தமுரி பாலகிருஷ்ணா தனது கருத்தை தெரிவித்து உள்ளார். மேலும், தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பொய்ப் பிரசாரங்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செவிலியர்களை இழிவுபடுத்தும் வகையில் சிலர் மேற்கொள்ளும் பொய்ப் பிரச்சாரத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். என் வார்த்தைகள் விருப்பப்படி திரிக்கப்பட்டு உள்ளன. நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சேவை செய்யும் என் சகோதரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. பசவதாரகம் புற்றுநோய் மருத்துவமனையில் செவிலியர்களின் சேவையை நேரில் பார்த்தேன். இரவும் பகலும் உயிரைக் காப்பாற்றும் என் சகோதரிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

அவர்களுக்கு எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. கொரோனா காலத்தில், உலகம் முழுவதும் உள்ள பல செவிலியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்தனர். அத்தகைய செவிலியர்களை நாம் பாராட்ட வேண்டும். எனது வார்த்தைகள் உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என அதில் பாலகிருஷ்ணா கூறி உள்ளார்.

Leave your comments here...