7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகம் வெளியீடு..!

இந்தியா

7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகம் வெளியீடு..!

7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகம் வெளியீடு..!

புகழ்பெற்ற மண்ணியல் வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகள் பங்கேற்ற சர்வதேச மாநாட்டில் உலகளவில் 7 பிராந்தியங்களுக்கான ‘மண் காப்போம்’ கொள்கை விளக்க புத்தகத்தை சத்குரு வெளியிட்டார்.

உலக மண் தினத்தை முன்னிட்டு ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற இந்த சர்வதேச வட்ட மேசை மாநாட்டில் 31 நாடுகளை சேர்ந்த 155 மண்ணியல் வல்லுநர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, ஐ.நாவின் பாலைவனமாதலை தடுக்கும் கூட்டமைப்பின் பொது செயலாளர் (UNCCD) இப்ராஹிம் தியாவ், ஆஸ்திரிலேய நாட்டு வேளாண் வல்லுநர் டோனி ரினாடோ, ஜி 20 Land Initiative – UNCCD அமைப்பின் இயக்குநர் டாக்டர் முரளி தும்மருகுடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, ஒசானியா என 7 தனி தனி பிராந்தியங்களுக்கு அங்குள்ள சுற்றுச்சூழல் நிலைக்கு ஏற்ப மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான கொள்கை விளக்க புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இந்த புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள நடைமுறைக்கு உகந்த, அறிவியல் பூர்வமான வழிமுறைகளை அரசாங்கங்கள் அமல்படுத்துவதன் மூலம் அந்தந்த நாடுகளில் மண் வளத்தை மீட்டெடுக்க முடியும். இதேபோல், 193 நாடுகள் சுமார் 700 வழிகளில் மண் வளத்தை மேம்படுத்த உதவும் ‘நிலைத்த மண் வள மேம்பாட்டு வழிமுறைகள்’ என்ற பெயரிலான பரிந்துரை புத்தகமும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய சத்குரு, “உலகம் முழுவதும் உள்ள சாமானிய பொதுமக்கள், மண் வள பாதுப்பின் அவசியத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், விஞ்ஞானிகளும், வல்லுநர்களும் எளிய மொழியில் பேச வேண்டும். ஏனென்றால், மக்கள் இந்தப் பிரச்சினையை தெளிவாக புரிந்து கொண்டால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

மண் காப்போம் இயக்கத்திற்கு கிடைத்துள்ள சர்வதேச ஆதரவின் அடிப்படையில் பார்க்கும் போது, அரசாங்கங்கள் இதற்கான கொள்கைகளை கட்டாயம் உருவாக்கும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், அது எவ்வளவு துரிதமாக நடைபெறும் என்பது மட்டுமே என்னுடைய கவலையாக இருக்கிறது. எனவே, ஜனநாயக நாடுகளில் மக்களின் ஆதரவு குரல்கள் சத்தமாக ஒலிக்காமல், அரசாங்கங்கள்
எந்த ஒரு செயலிலும் விரைந்து செயல்படாது. எனவே, மண் வளப் பாதுகாப்பை ஒரு தேர்தல் பிரச்சினையாகவும் மாற்ற வேண்டும்.” என்றார்.

மண் வளத்தை மேம்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து ஜி 20 Land Initiative – UNCCD அமைப்பின் இயக்குநர் டாக்டர் முரளி தும்மருகுடி பேசுகையில், “மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டுமேன்றால், அது குறித்து கல்வியறிவு மக்களிடம் இருக்க வேண்டும். மண் வளமாக இருப்பது எந்தளவுக்கு அத்தியாவசியமானது என்பதை மக்கள் உணர வேண்டும். ஆகவே தான் இந்த செயலில் சத்குரு மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் பங்கு மிக அவசியமாகிறது” என்றார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மண்ணியல் வல்லுநர் டாக்டர் பால் லு பேசுகையில், “பருவநிலை மாற்றம், பாலைவனமாதல், பல்லுயிர் பெருக்க பாதிப்பு, உணவு பாதுகாப்பு என அனைத்து முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் மண் வளம் இழப்பது தான் அடிப்படை காரணம். எனவே, இதை சரி செய்தால் மற்ற பிரச்சினைகளையும் எளிதில் சரி செய்துவிட முடியும்” என்றார்.

Leave your comments here...