நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் கட்டுப்பாடுகள் தானாக தகர்ந்துவிடும் – குரு பெளர்ணமி சத்சங்கத்தில் சத்குரு உரை

தமிழகம்

நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் கட்டுப்பாடுகள் தானாக தகர்ந்துவிடும் – குரு பெளர்ணமி சத்சங்கத்தில் சத்குரு உரை

நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் கட்டுப்பாடுகள் தானாக தகர்ந்துவிடும் – குரு பெளர்ணமி சத்சங்கத்தில் சத்குரு உரை

“கட்டுப்பாடுகளுடன் போராட வேண்டாம். அதனால், எந்த பயனும் இல்லை. நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் அனைத்து வித கட்டுப்பாடுகளும் தானாக கீழே விழுந்துவிடும்” என குரு பெளர்ணமி சத்சங்கத்தில் சத்குரு கூறினார்.

யோக கலாச்சாரத்தில் ஆதியோகியான சிவன், ஆதி குருவாக மாறிய பெளர்ணமி நாள் குரு பெளர்ணமியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் சத்குருவின் சிறப்பு சத்சங்கம் இன்று (ஜூலை 13) நடைப்பெற்றது.

இதில் அமெரிக்காவில் உள்ள ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில் இருந்து சத்குரு பேசியதாவது: வருடத்தில் மற்ற எல்லா நாட்களையும் விட குரு பெளர்ணமி நாளில் சந்திரன் பூமிக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதனால், சந்திரனுடைய ஈர்ப்பு சக்தியின் தாக்கம் நம் மீதுஅதிகமாக இருக்கும். இன்றைய தினம் கடல் அலைகள் அதிகளவில் மேல் எழும்பும். அதேபோல், நம் உடலில் உள்ள திரவங்களும் மேல் நோக்கி நகரும். இன்று நீங்கள் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறீர்களோ, அது பெருகும். நீங்கள் கோபமாகவோ, வருத்தமாகவோ இருந்தால் அந்த உணர்வு அதிகரிக்கும். மகிழ்ச்சியாகவோ, சந்தோசமாகவோ, ஆனந்தமாகவோ இருந்தால் அதுவும் அதிகரிக்கும்.

மனிதர்கள் பல்வேறு விதமான கட்டாயங்களின் கலவையாகவும், விழிப்புணர்வின் கலவையாகவும் இருக்கிறார்கள். இந்த கட்டாயங்கள் பிழைப்புணர்வை சார்ந்ததாக உள்ளது; இனப் பெருக்க உணர்வை சார்ந்ததாகவும் உள்ளது. மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் என பல்வேறு வித கட்டுப்பாடுகளில் மனிதர்கள் வாழ்கிறார்கள். இவையனைத்தும் அவர்களின் வாழ்நாள் முழுவதையுமே ஆட்டி படைக்கிறது.

பெரும்பாலான மனிதர்கள் விழிப்புணர்வாக இருப்பதற்கு மிக நெருக்கமாக கூட வருவதில்லை. நீங்கள் விழிப்புணர்வாக இல்லாவிட்டால் எதையும் உணரமாட்டீர்கள். இது காற்றை போல. நீங்கள் விழிப்புணர்வுடன் இல்லாவிட்டால் நீங்கள் மூச்சு விடுகிறீர்கள் என்பது கூட உங்களுக்கு தெரியாது. இந்த பூமியில் எத்தனை மனிதர்கள் 24 மணிநேரத்தில் 5, 10 நிமிடங்களாவது அவர்கள் மூச்சு விடுகிறார்கள் என்ற விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள்? ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் மூச்சை கவனிப்பது இல்லை. நீங்கள் 2 நிமிடங்கள் மூச்சு விடுவதை நிறுத்தினாலும் உங்கள் உயிர் பிரிந்துவிடும். இருந்தும் மூச்சை நீங்கள் கவனிப்பது இல்லை.

விழிப்புணர்வு என்பது நீங்கள் சுவாசிக்கும் காற்றை விட அடிப்படையானது; அத்தியாவசியமானது. பெரும்பாலான மக்கள் வெறும் பிழைப்பு செயல்முறையிலேயே காலம் காலமாக மூழ்கி இருக்கிறார்கள். அவர்கள் பல விதங்களில் வாழ்வதற்கு இறந்து கொண்டு இருகிறார்கள். வாழ்வதற்காக ஏங்கி ஏங்கியே இறந்து கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்க கூடாது. நீங்கள் முழுமையாக வாழ்ந்து ஒரு நாள் இறந்து போக வேண்டும். வாழ்வதற்காகவே தினமும் இறக்க கூடாது. நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால் அனைத்து கட்டுப்பாடுகளும் தானாகவே கீழே விழுந்துவிடும். இவ்வாறு சத்குரு கூறினார்.

குரு பெளர்ணமி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கோவை ஈஷா யோகா மையத்திற்கு இன்று வருகை தந்தனர். அவர்கள் தியானலிங்கம், லிங்க பைரவி, ஆதியோகி ஆகிய இடங்களுக்கு சென்று தரிசனம் செய்தனர். மாலையில் நந்தி முன்பாக பழங்குடி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சியும், லிங்க பைரவி யாத்திரையும் நடைபெற்றது.

Leave your comments here...