பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி கைது – அண்ணாமலை கண்டனம்

அரசியல்

பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி கைது – அண்ணாமலை கண்டனம்

பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி  கைது – அண்ணாமலை கண்டனம்

ட்விட்டரில் சர்ச்சைக்குரிய பதிவை பகிர்ந்ததாக பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி நேற்று கைது செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்தவர் என்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்த கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜக-வின் செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்து வரும்சௌதாமணி (Sowdhamani) தனது ட்விட்டர் பக்கத்தில் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சௌதாமணியை சைபர் கிரைம் போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதற்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக ஊடகத்தில் யாரோ வெளியிட்ட பதிவை சௌதாமணி மற்றொருவருக்கு பகிர்ந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

நாட்டின் ஒற்றுமைக்கும் அமைதிக்கும் ஊறு விளைவிக்கும் விதமாக வெளிப்படையாக கருத்துக்களை பதிவு செய்பவர்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உலா வந்துகொண்டு இருக்கிறார்கள். தமிழகத்தின் 8 கோடி இந்து மக்கள் வணங்கும் தெய்வங்களை, சமூக ஊடகங்கள் மூலம் கேலி கிண்டல் செய்து கொச்சைப்படுத்தி பதிவுகள் போடுவது இன்று வாடிக்கையாகிவிட்டது.

ஏற்கனவே கருப்பர் கூட்டம் மூலம் தமிழ் கடவுள் முருகனை , கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தினார்கள். சமீபத்தில் யு டு புரூட்டஸ் என்ற சேனலில் தில்லை நடராஜர் நடனமாடும் கோலத்தை தரம் தாழ்த்தி விமர்சித்துள்ளனர். இவர்கள் மீதெல்லாம் பல்வேறு இடங்களில் புகார்கள் கொடுத்தும் இதுவரை திமுக அரசும் காவல்துறையும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதே சமயம் சௌதாமணி மீது சாட்டப்பட்ட குற்றத்திற்கு தகுந்த விளக்கம் கொடுத்த பிறகும் அவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இதை வன்மையாக கண்டிக்கிறேன். காழ்புணர்ச்சியோடு இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ள திமுக அரசு உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Leave your comments here...