கண்டெயினரில் தீப்பற்றி எரிந்த 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் -விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு..!

இந்தியா

கண்டெயினரில் தீப்பற்றி எரிந்த 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் -விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு..!

கண்டெயினரில் தீப்பற்றி எரிந்த 20 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் -விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய அரசு..!

இந்தியாவில் எலக்டரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவது சமீப காலமாக அதிகரித்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஜிதிந்திரா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கண்டெய்னர்களில் ஏற்றி தொழில்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது, கண்டெய்னர்களில் இருந்த 20க்கும் மேற்பட்ட ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு இதுதொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு கண்டெய்னர் தீ அணைக்கப்பட்டது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டெய்னரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்றது. எங்கள் நிறுவனம் உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து விட்டது. பாதுகாப்பே நிறுவனத்தின் பிரதான நோக்கம். எனவே, இதன் காரணத்தை உடனடியாக கண்டறிந்து அதற்கான தீர்வு எட்டப்படும். கடந்த ஒரு மாத காலத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரியும் ஐந்தாவது சம்பவம் இதுவாகும்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விபத்துக்குள்ளான வேலூர், புனே, திருச்சி, நாசிக் ஆகிய பகுதிகளுக்கு மத்திய அரசு விசாரணை அதிகாரிகள் விரைந்துள்ளனர். மேலும், ஒகின்வா மற்றும் ஓலா நிறுவனத்தை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சாலைப்போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மோசமான பேட்டரி டிசைன்களே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நூறு ரூபாயைத் தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மக்கள் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாற ஆர்வம் காட்டிவருகின்றனர்.

அதை ஊக்குவிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகளும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மானியம் வழங்கி வருகின்றன. ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விபத்துகள் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற விபத்தில் இரு முறை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதால் அரசு இந்த விவகாரத்தில் உடனடி கவனத்தை செலுத்த தொடங்கியுள்ளது. விபத்துக்குள்ளான வாகனங்களின் நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் விசாரணையை தொடங்கியுள்ளன.

Leave your comments here...