மண் வளப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா தலைமையகத்தில் உரையாற்றிய சத்குரு.!

இந்தியாஉலகம்தமிழகம்

மண் வளப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா தலைமையகத்தில் உரையாற்றிய சத்குரு.!

மண் வளப் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா தலைமையகத்தில் உரையாற்றிய சத்குரு.!

“மண் அழிவை தடுத்து, அதன் வளத்தை மீட்டெடுக்க உலகெங்கும் உள்ள மக்கள் இப்போதே குரல் கொடுக்க வேண்டும்” என ஜெனிவாவில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் சத்குரு பேசினார்.

அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ‘மண் காப்போம்’ என்ற உலகாளவிய சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதுகுறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள அவர் 16-வது நாளில் ஜெனிவா நகரை சென்றடைந்தார்.

இந்நிலையில், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக ஐ.நாவிற்கான இந்திய நிரந்திர திட்ட அமைப்பு (Permanent Mission of India) சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஜெனிவாவில் ஏப்ரல் 5-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்று பேசியதாவது: நம்முடைய வாழ்விற்கும் நம்மை சுற்றியுள்ள மற்ற உயிரினங்களின் வாழ்விற்கும் மண் தான் அடித்தளமாக உள்ளது. மண் வளமாக இருந்தால் தான் நாம் நலமாக இருக்க முடியும். உலகின் பல நாடுகளில் மண் தனது வளத்தை வேகமாக இழந்து, அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்தப் பிரச்சினை இப்படியே தீர்வு காணப்படாமல் சென்றால், உலக அளவில் மிகப் பெரிய உணவு தட்டுப்பாடு ஏற்படும் என ஐ.நா எச்சரித்துள்ளது. மேலும், மண் முற்றிலுமாக வளம் இழந்து தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரிக்கும், உள்நாட்டு கலவரங்கள் உருவாகும், மக்கள் பெருமளவில் இடம்பெயர வேண்டிய அவலநிலையும் உருவாகும் என கூறியுள்ளது.

எனவே, மண் வளத்தை பாதுகாப்பதற்கு தேவையான சட்டங்கள் இப்போதே இயற்றப்பட வேண்டும். மண் அழிவை தடுப்பதற்கும், அதன் வளத்தை மீட்டு எடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் ஈடுப்பட வேண்டும்.

அதற்கு மக்கள் குரல் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம். ஜனநாயக நாடுகளில் இரண்டு விஷயங்களுக்கு மிக அதிகமான சக்தி இருக்கிறது. ஒன்று உங்களுடைய ஓட்டு, மற்றொன்று உங்களுடைய குரல். மண் வளத்தை பாதுகாப்பது குறித்து இதுவரை நீங்கள் என்ன பேசியுள்ளீர்கள்? உங்களுடைய குரல் எங்கே போனது? நீங்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது.

நீங்கள் சத்தமாக குரல் எழுப்பாவிட்டால், நீண்ட காலம் செயல் செய்து தீர்வு காண வேண்டிய இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த அரசாங்கமும் ஆர்வம்காட்டாது. நீங்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டாம். ஆனால், மண் குறித்து ஏதாவது ஒரு விஷயத்தை தினமும் பேசுங்கள்.இவ்வாறு சத்குரு பேசினார்.

ஜெனிவாவில் இருக்கும் ஐ.நாவின் பொது இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்த நடியா இஸ்லர் பேசுகையில், “சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண உரிய சட்டங்களை இயற்றவும், அதை அனைத்து மட்டங்களில் செயல்படுத்தவும் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்” என கூறினார்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) உதவி பொது இயக்குநர் (ADG) டாக்டர். நவ்கோ யமமோட்டோ பேசுகையில், “உலகளவில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தொற்றா நோய்களில் இருந்து நம்மை காத்து கொள்ளவும் மண்ணை வளமாக வைத்து கொள்வது அவசியம். மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் சர்வதேச சமூகங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.

சர்வதேச சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) துணை இயக்குநர் ஸ்டிவெர்ட் மெகின்னிஸ் பேசுகையில், “ஒரு கைப்பிடி மண்ணில் எண்ணற்ற நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. அந்த நுண்ணுயிர்கள் மண்ணில் உயிருடன் இருந்தால் தான் நாமும் உயிருடன் இருக்க முடியும்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஐ.நாவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதர் இந்திரா மணி பாண்டே, ஜெனிவாவில் இருக்கும் இந்திய தூதரகத்தின் இயக்குநர் சுனில் அச்சாயா உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

Leave your comments here...