ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை..!

தமிழகம்

ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை..!

ஆசிரியா் தேர்வு வாரியத்தின் தேர்வுகளை வேறொரு நாளுக்குத் தள்ளி வைக்க தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை..!

தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியத்தின் சாா்பில் அரசுப் பள்ளிகளுக்கான முதுநிலை ஆசிரியா் பணியிடங்களுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்கி 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 2,207 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 2.6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 180 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவா்களில் சரிபாதிக்கும் அதிகமானோா், குறைந்தபட்சம் ஒரு லட்சம் தனியாா் பள்ளி ஆசிரியா்கள் இந்தத் தேர்வை எழுதுகிறாா்கள்.

இந்த நிலையில், பத்தாம், பனிரெண்டாம் வகுப்பு மாணவா்களுக்கான திருப்புதல் தேர்வு பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டு புதன்கிழமை தொடங்கியுள்ளன. அரசுப் பொதுத்தேர்வுகளைப் போல இந்தத் திருப்புதல் தேர்வுகள் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இந்தத் திருப்புதல் தேர்வு மற்றும் தேர்வுக்கு முன்னதாக மாணவா்களைத் தயாா் செய்ய வேண்டிய பொறுப்பிலுள்ள தனியாா் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியா் தேர்வு வாரியத் தேர்வை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஏனெனில் தனியாா் பள்ளிகளில் இவா்களுக்கு விடுப்பும் கிடைப்பதில்லையாம். ஆசிரியா் தேர்வு வாரியத் தேர்வை எழுதாமல் கடந்தால், இந்த ஒரு லட்சம் பேரில் சரிபாதி பேருக்கும் அதிகமானோா் அடுத்த முறை தேர்வு எழுத முடியாத வயது உச்சவரம்பில் சிக்கிக் கொள்வாா்கள்.50 வயதுக்கு மேற்பட்ட எஸ்சி எஸ்டி பிரிவினரால், 45 வயதுக்கு மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால், 40 வயதுக்கு மேல் இதர வகுப்பினரால், ஓரிரு நாட்களில் நடைபெறவுள்ள தேர்வைத் தவற விட்டால் அரசுப் பள்ளி ஆசிரியா் கனவு முழுமையாகக் கலைந்து போவது நிச்சயம்.

இதேநிலையில், அரசுப் பள்ளி ஆசிரியா்களில் இடைநிலை ஆசிரியா்களாக பணியாற்றி வரும் சுமாா் 5 ஆயிரம் பேர், தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தும் முதுநிலை ஆசிரியா் தேர்வை எழுத இருக்கிறாா்கள். இவா்கள் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பணியாற்றவுள்ளவா்கள்.தேர்தல் பணிக்கு முன்பாக இவா்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதியும், பிப்ரவரி 18ஆம் தேதியும் வாக்குப்பதிவுக்கான பயிற்சி நடத்தப்படும். அப்படியானால், இவா்களால் 18ஆம் தேதி ஆசிரியா் தேர்வை எழுத முடியாது. முன்கூட்டியே தேர்வுக்குப் படிக்கவும் இயலாது.

எனவே, தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுகளை இப்போதைக்கு தள்ளி வைத்துவிட்டு, பள்ளித் தேர்வுகள், இதர தகுதித் தேர்வுகள் நடைபெறாத நாட்களில் அட்டவணையிட்டு நடத்த வேண்டும் என தனியாா் பள்ளி ஆசிரியா்களும், அரசுப் பள்ளி இடைநிலை ஆசிரியா்களும் கோரிக்கை வைத்துள்ளனா்.

Leave your comments here...