தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

தமிழகம்

தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வு எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

தமிழகத்தில் பள்ளி பொதுத் தேர்வு எப்போது?  – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  விளக்கம்!

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்ததை அடுத்து, பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலன் கருதி, கடந்த செப்டம்பர் மாதம் முதல், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய அவதாரமான, ஒமைக்ரான் வைரஸ் தொற்று பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் 31 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைன் வாயிலாக மேற்கண்ட வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதே போல், பொதுத் தேர்வு எழுத உள்ள 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இம்மாத இறுதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை விவகாரம் தொடர்பாக, தஞ்சை திருக்காட்டுப்பள்ளியில் மாணவி பயின்ற பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம், துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. எதுவாக இருந்தாலும், யாராக இருந்தாலும், உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணவியின் மரணம் தொடர்பாக, முதற்கட்டமாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாணவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளதை அடுத்து பல்வேறு புகார்களை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாம்.

வரும் 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும். 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Leave your comments here...