ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்..!

சமூக நலன்தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்..!

ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்தநாள் கொண்டாடிய கிராம மக்கள்..!

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குருவித்துறை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட காளைகளை வளர்ப்பதாக கூறுகின்றனர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது குருவித்துறை, மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்காக சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகளை வளர்த்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்களுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பாக மாமிசம் சாப்பிடுவது மற்றும் மது போன்ற தீய பழக்கங்களை விட்டு விலகி ஜல்லிக்கட்டுக்காக விரதமிருந்து வருகின்றனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடந்தாலும், தங்களது ஊரில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு மற்றும் தங்க காசுகளை பெற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு கூட அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் குருவித்துறை கிராமத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் இரண்டாம் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய சிறப்புமிக்க குருவித்துறை கிராமத்தில், பெண்களும் சேர்ந்து ஜல்லிக்கட்டு காளைகளை தங்களது வீட்டு பிள்ளைகளை போல் வளர்த்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. அதுவும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுப்பது மணல் மேடுகளில் முட்டு பயிற்சி கொடுப்பது மற்றும் நடை பயிற்சி அளிப்பது முக்கியமாக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தேவையான திடகாத்திரமான உணவுவகைகளை சிறப்பு கவனம் செலுத்தி தயாரித்து வழங்கி வருவது உள்ளிட்ட பணிகளை பொருளாதார ரீதியில் பின்தங்கிய நிலையில் இருந்தாலும், தங்களின் விருப்பமான செயல்களில் ஒன்றாக நினைத்து செய்து வருகின்றனர்.

மேலும், இங்குள்ள ஆண்களும் தங்களின் வருமானத்தில் பெரும்பகுதியை வருடம் தோறும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெற வெளி மாவட்டங்களுக்கு சென்று வருவது போன்றவற்றிற்காக பயன்படுத்தி வருகின்றனர்.

குருவித்துறை கிராமத்தைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் அலெக்ஸ் என்பவர் கூறும்போது : தனது ஜல்லிக்கட்டு காளைக்கு இன்று பிறந்த நாள் ஆகும் இந்த நாளை கிராமத்தினர் ஒன்றுகூடி பிறந்தநாள் விழா கொண்டாடியது எங்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்தது. மேலும், எங்கள் வீட்டில் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக பத்துக்கும் மேற்பட்ட மாடுகள் வளர்த்து வருகிறோம் நாங்கள் வளர்க்கும் காளைகளுக்கு எதிர்வரும் பொங்கல் திருநாளையொட்டி நடைபெறும் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தயார் செய்து வருகிறோம். நாங்கள் வளர்த்து வரும் ஜல்லிக்கட்டு காளை ஒன்றுக்கு இன்று பிறந்த நாள் ஆகும் பிறந்தநாளின் போது தனது குழந்தைக்கு பிறந்த நாள் கொண்டாடுவது போலவே அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினோம். அந்தக் காளை ஜல்லிக்கட்டு போட்டியில் பரிசு பெற அதற்கு நீச்சல் பயிற்சி நடைப்பயிற்சி சத்தான உணவு வகைகள் பேரிச்சம்பழம் இஞ்சி உள்ளிட்ட மருத்துவ பொருள்கள் வழங்கி அதனை சிறப்பாக பராமரித்தும் வருகிறோம் என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வரும் தேவி என்பவர் கூறும்போது: கடந்த நான்கு தலைமுறைகளாக நாங்கள் ஜல்லிக்கட்டு போட்டிக்கான மாடுகளை வளர்த்து வருகிறோம். குறிப்பாக, நமது நாட்டின் பாரம்பரிய மிக்க நாட்டு மாடுகளை வளர்த்து அதனை தமிழக அளவில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்து பல்வேறு பரிசுகளும் பெற்று வந்திருக்கிறோம். இதற்காக ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே எங்கள் கிராமமான குருவித்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாடு வளர்ப்போர் மற்றும் மாடு பிடிப்போர் அனைவரும் மது மாமிசம், அருந்தாமல் ஐயப்ப பக்தர்கள் போல் விரதமிருந்து ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறோம். மேலும், ஜல்லிக்கட்டு முடியும் வரை மாடுகளுக்கும் சிறப்பான பயிற்சி கொடுத்து மாடு பிடிப்பதற்கும் பயிற்சி அளித்து வருகிறோம் . எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகளும் இதே நிலையில் தயாராகி வருவதாக கூறுகின்றார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர் பசும்பொன் கூறும்போது: நாங்கள் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் காளைகளை பிடிக்க தயாராகி வருகிறோம். அதற்கு முன்பாக லோக்கல் வாடி வைத்து மாடுகளை பிடித்து பயிற்சி பெற்று வருகிறார். மாடுகளை நீச்சல் பயிற்சி செய்ய விட்டு நாங்களும் அதனுடன் நீச்சல் பயிற்சியை செய்து வருகிறோம் மாடுகளின் குணாதிசயங்களை அதன் போக்கில் சென்று பழகி வருகிறோம். அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையை அடக்குவதற்கு பனியன்கள் தயார் செய்து தயாராக இருக்கிறோம் நேற்று கூட ஜல்லிக்கட்டு காளையை அடக்கி பயிற்சி செய்த போது தவறுதலாக கையில் காயம் ஏற்பட்டுவிட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்களுக்கு முன்னதாக காயம் சரியாகிவிடும் மேலும், ஒரு மாதத்திற்கு சைவ உணவுகளையே சாப்பிட்டு வருகிறோம் மீன் கறி போன்ற அசைவ உணவுகளை சாப்பிட மாட்டோம் காளைகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பாக ,எங்களின் கிராமத்திலுள்ள குல தெய்வங்களை கும்பிட்டுவிட்டு செல்வோம் என்று கூறினார்.

மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் அருகே குருவித்துறை கிராமத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது மற்றும் சுமார் 800க்கும் மேற்பட்ட காளைகளை கிராமத்தினர் வளர்த்து வருவது ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்க பெண்கள் தனி கவனம் செலுத்தி தங்களது குடும்ப வருமானத்தை செலவழித்து வருவது மற்றும் தமிழக முழுவதும் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகளை கொண்டு சென்று ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து பரிசுகளை வென்று வருவது குறிப்பாக அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் போன்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமான பரிசுகளைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி : Madurai -RaviChandran

Leave your comments here...