ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழகம்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

திருச்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மேம்படுத்தப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார். தஞ்சையில் இன்று (வியாழக்கிழமை) காலை மன்னர் சரபோஜி கலைக்கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து விட்டு கார் மூலம் மதியம் திருச்சி வருகிறார்.

சின்னசாமி பிள்ளை சத்திரம் அருகே உள்ளதால் சத்திரம் பேருந்து நிலையம் என பெயர்பெற்ற இந்தப் பேருந்து நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 28 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 30 பேருந்துகள் நிறுத்தும் வசதியும், 11 கடைகள், தாய்மாாகள் பாலூட்டும் அறை, பொருள்கள் பாதுகாப்பகம், ஓய்வறை, கழிவறைகளும், முதல் தளத்தில் 17 கடைகள், 5 உணவகங்கள், காவல் உதவி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 350 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று திருச்சியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கிறார்.

மேலும் கால்நடை மருந்தக கட்டிடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுப்படுத்தப்பட்ட பணிகள், தரம் உயர்த்தப்பட்ட தார்சாலை பணிகள், மருங்காபுரி வட்டாரத்துக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமையம், மன்னார்புரத்தில் மண் பரி சோதனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஓடைத்துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளிட்ட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும் அவர், பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பஸ் நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அதற்காக முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 28 அரசுதுறைகளின் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். இந்த விழாவில் மொத்தம் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளைதொடங்கி வைத்தும், நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.

அதைத்தொடர்ந்து பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிடுகிறார். பின்னர் தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். மு.க.ஸ்டாலின் திருச்சி வருகையொட்டி, திருச்சி-திண்டுக்கல் சாலையில் இன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணிவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும், திண்டுக்கல்லில் இருந்து திருச்சி வரும் வாகனங்கள் அனைத்தும் மணப்பாறை, விராலிமலை வழியாக திருச்சி மன்னார்புரம் வந்து செல்ல மாநகர போலீசார் மாற்றம் செய்து அறிவித்துள்ளனர்.மேலும் ஸ்டாலின் வருகையையொட்டி, மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Leave your comments here...