மீன் நாற்றம் வீசுவதாக கூறி மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் : 3 பேர் பணியிடை நீக்கம்

தமிழகம்

மீன் நாற்றம் வீசுவதாக கூறி மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் : 3 பேர் பணியிடை நீக்கம்

மீன் நாற்றம் வீசுவதாக கூறி மூதாட்டியை பஸ்சில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் : 3 பேர் பணியிடை நீக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வாணியக்குடி மீனவ கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (65). தலைச் சுமையாக மீன்களை கொண்டு குளச்சல் பகுதியில் சென்று வியாபாரம் செய்து வருகிறார். தினமும் காலையில் தலையில் சுமந்து மீன்களை விற்பனை செய்த பின்னர் நாகர்கோவிலில் மீன் சந்தையில் விற்பனை செய்வார். அதைத்தொடர்ந்து இரவில் மகளிருக்கான இலவச அரசு பேருந்தில் ஊர் திரும்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதைப்போல் நேற்று இரவில் மீன்களை விற்றுவிட்டு குளச்சல் பேருந்து நிலையத்தில் இருந்து நாகர்கோவிலில் இருந்து கோடிமுனை செல்லும் மகளிருக்கான அரசுப் பேருந்தில் செல்வம் ஏறியுள்ளார்.அப்போது அந்த பேருந்து நடத்துனர் செல்வத்தின் மீது மீன்நாற்றம் வீசுவதாக சொல்லி பேருந்தில் இருந்து இறக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் ஊர் சேரமுடியாமல் தவித்த மூதாட்டி செல்வம், குளச்சல் பேருந்து நிலைய நேர கட்டுப்பாட்டு அலுவலகம் முன்பு வந்து நின்று அழுதவாறு கூச்சலிட்டார். “வயசான பொம்பளய பஸ்சில் இருந்து இறக்கி விட்டுட்டாங்க… மீன்நாற்றம் அடிப்பதாக சொல்றாங்க. இனி வாணியக்குடி வரை நான் நடந்து தான் போணுமா?” என ஆதங்கத்துடன் பயணிகளிடம் புலம்பினார். மேலும் அழுதவாறு பேருந்து நிலைய சுவரிலே சாய்ந்தவாறு நின்றார்.

இதை அங்கு நின்ற பயணிகள் சிலர் செல்போனில் படம்பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர். மீன்விற்கும் மூதாட்டி செல்வம் பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்டதாக கதறி அழும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதை பார்த்த சமூக ஆர்வலர்கள் அரசு போக்குவரத்து கழகத்திற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குமரி அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

குமரி அரசுப் போக்குவரத்து கழக பொதுமேலாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் நாகர்கோவில் இயக்குதல், மற்றும் ஆய்வு அதிகாரி ஜெரோலின் லிஸ்பன்சிங் பாதிக்கப்பட்ட பெண் செல்வத்தின் வீட்டில் நேரடியாக சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது சம்பந்தப்பட்ட ஓட்டுனர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தபோது, தனது மகன்களை போன்று அவர்கள், பாதிக்கும்படியாக எதுவும் செய்துவிடாதீர்கள் எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் இந்நிகழ்வு தமிழக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் வரை சென்றதால் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், நேரக் காப்பாளர் ஜெயகுமார் ஆகிய 3 பேரையும் இன்று இரவு பணியிடை நீக்கம் செய்து குமரி அரசுப் போக்குவரத்து கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்:

இதற்கிடையில் குமரி சம்பவத்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Leave your comments here...