நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ 1 லட்சம் ரூபாய் பரிசு -பாமக மாவட்ட செயலாளரின் சர்ச்சை பேச்சு..!

அரசியல்சினிமா துளிகள்தமிழகம்

நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ 1 லட்சம் ரூபாய் பரிசு -பாமக மாவட்ட செயலாளரின் சர்ச்சை பேச்சு..!

நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ 1 லட்சம் ரூபாய் பரிசு -பாமக மாவட்ட செயலாளரின் சர்ச்சை பேச்சு..!

ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சூர்யாவை எட்டி உதைத்தாலோ, தாக்கினாலோ ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

இந்த படத்திற்கு பல்வேறு எதிர்ப்புகள் ஆரம்பம் முதலே இருந்து வருகின்றன. குறிப்பாக வன்னியர் சமூகத்தையும் வன்னியர் சமூக முக்கிய பிரமுகர்களையும் இந்தப்படம் அவமானப்படுத்துவதாக சொல்லி பாமகவினர் குறிப்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கும் போக்கு கொண்ட காவல்துறை சார்பு ஆய்வாளர் வீட்டில் உண்மையிலேயே அவர் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும்கூட அவரை வன்னியர் என்று காட்டும் வன்மத்துடன் அக்கினி கலசத்துடன் கூடிய வன்னியர் சங்க நாட்காட்டி இடம் பெற்று இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருந்தார் அன்புமணி ராமதாஸ்.

மேலும் உண்மை சம்பவத்தில் அந்த காவல் ஆய்வாளரின் பெயர் அந்தோணிசாமி என்பது பலரும் அறிந்த உண்மை. ஆனாலும் அந்தப் பாத்திரத்திற்கு குருமூர்த்தி என்று பெயர் சூட்டி வன்னியர் சங்கத்தின் மறைந்த தலைவர் ஜெ. குரு அவர்களை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைப்பது கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்திருந்தார். மேலும், உண்மை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற கேரக்டர்களுக்கு உண்மை சம்பவத்தின் கேரக்டர் பெயர்களையே வைத்த நீங்கள் அந்தோணிசாமி கேரக்டருக்கு மட்டும் எதற்கு குருமூர்த்தி என்கிற பெயரை வைத்தீர்கள். அதை நீதிபதி குரு என்று அழைக்கும் வகையில் ஏன் காட்சி அமைப்புகள் என்று கேள்வி எழுப்பியிருந்தார் அன்புமணி ராமதாஸ்.

அன்புமணியின் இந்த எதிர்ப்புகள் அடுத்து படத்திலிருந்து அந்த காட்சிகள் நீக்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், படைப்பு சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்க கூடாது என்று பதிலடி கொடுத்திருந்தார் சூர்யா. இதனால் கொதித்தெழுந்த குருவின் மருமகன், சூர்யாவின் படங்கள் திரையிடப்படும் தியேட்டர்களை அடித்து நொறுக்குவோம் என்றார் ஆவேசமாக.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்கிடம் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி தலைமையில் பாமவினர் ஜெய்பீம் தயாரிப்பாளர், இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.

இது குறித்து அந்த மனுவில் நடிகர் சூரியா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டிவிட்டு வேண்டுமென்றே வன்னியர் சமுதாயத்தினரை இழிவுபடுத்தும் விதமாக அப்படத்தில் ஒரு குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியும், மறைந்த வன்னியர் சங்கத்தலைர் குருபெயரை அந்த வில்லனுக்கு வைத்து அவரது புகழுக்கும் மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். வன்னிய சமுதாய மக்கள் அனைத்து சமுதாய மக்களுடன் இணக்கமாக பழகிவரும் வேளையில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிற சமுதாயத்தினருக்கு எதிராக வன்னியர்கள் செயல்படுவதுபோல் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்துவதுபோல் படத்தை எடுத்துள்ளனர். எனவே ஜெய்பீடம் பட தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா இயக்குனர் ஞானவேல் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த வேல் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கிற்கு வந்த பாமகவினர் திரைப்பட காட்சியை நிறுத்த சொன்னதால் ஒடிக்கொண்டிருந்த வேல் திரைப்படம் காட்சி நிறுத்தப்பட்டது. நடிகர் சூர்யாவிற்கு எதிராக பாமகவினர் முழக்கமிட்டனர். சூர்யாவின் போஸ்டரை கிழித்தனர். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேறினர். பின்னர் போலீசார் வந்து வேல் படத்தை திரையிட சொல்லியும் திரையரங்க உரிமையாளர் பிரச்சனை தேவை இல்லை. நாங்கள் வேறு படத்தை மாற்றிக் கொள்கிறோம் என்று தெரிவித்து விட்டார்கள்.

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், வன்னிய சமுதாய மக்களை இழிவுபடுத்திய நடிகர் சூரியா மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவை தாக்கும் இளைஞர்களுக்கு மயிலாடுதுறை மாவட்ட பாமக சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்றும், இந்த மாவட்டத்தில் சூரியாவின் எந்த படத்தையும் திரையிடுவதற்கு பாமக அனுமதிக்காது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

Leave your comments here...