கோயில்களை திறக்காவிட்டால் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார் – ஹெச்.ராஜா

அரசியல்தமிழகம்

கோயில்களை திறக்காவிட்டால் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார் – ஹெச்.ராஜா

கோயில்களை திறக்காவிட்டால் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார் – ஹெச்.ராஜா

தமிழகத்தில் பூங்காக்கள், தியேட்டர்கள் திறக்கப்பட்ட நிலையில், வார இறுதி நாட்களில் கோயில்களை திறப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் மக்களும் தண்டிப்பார்கள், மகேசனும் தண்டிப்பார் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் 64 வது பிறந்தாள் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ஹிந்து சமுதாயத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடந்துவுரும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தமிழ்நாடு கேரளா போல ஹிந்து சிறுபான்மை மாநிலமாக மாறி விடக்கூடாது என்ற கவலையை 7 ஆண்டுகளாக வெளிப்படையாக தெரிவித்து வருகிறேன். திரைப்படங்கள் மூலம் ஹிந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துதல், கேலி செய்யும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் சாதாரண சட்ட ஒழுங்கு பிரச்சனையை சாதி பிரச்சினையாகி கலவரத்தை உண்டாக்குகின்றன. இதற்கென சில கட்சிகள் உள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க, சமூக விரோத ரவுடிகளை கைது செய்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு திருமாவளவன், வன்னிஅரசு போன்றோர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியா? சட்டம் – ஒழுங்கை காப்பாற்ற காவல் துறை ஜாதி பார்த்து ரவுடிகளை கைது செய்யவில்லை.

தமிழ்த்திரைப்படம் மூலமாக, ஹிந்து மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது, கேலி செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கும் காலத்தில் சமூக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் பாடம் எடுப்பது போல ருத்ரதாண்டவம் என்கிற நல்ல படம் வந்துள்ளது. தமிழகத்தில் சிலகாலமாக சாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஜாதிப்பிரச்னையாக மாற்றி கலவரம் உருவாக்கப்படுகிறது. இதற்கென்றே சில கட்சிகள் உள்ளன. இதனை அப்படத்தில் தெரிவிக்கிறார்கள்.

இத்திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக தவறான வார்த்தையை நான் பயன்படுத்தவில்லை. அமைச்சர் வி.கே.சிங்கும் இதே வார்த்தையைதான் பயன்படுத்தியுள்ளார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் வருத்தமான விஷயம்தான். நான் பேசிய வார்த்தை தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் இருக்கிறது. சிலருக்கு ஹெச்.ராஜா மட்டுமே டார்கெட். ஜனநாயக உரிமைகளுக்காகவும், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பவன் நான்தான்.

உள்நோக்கத்தோடு ஒரு சிலர் ஆளுநர் பதவியை பற்றி அநாகரிகமாக பேசுவதை அனுமதிக்க முடியாது. முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மிகப்பெரிய சமூகப் பின்னணி கொண்டவர்; நேர்மையானவர். ஐபிஎஸ் அதிகாரி தமிழகத்திற்கு ஆளுநராக வருவது புதிதல்ல.

தமிழகத்தில் குழந்தைகள் பூங்கா, தியேட்டர்கள், மால்கள் திறந்துள்ளன. ஆனால், இந்துக் கோயில்களில் குறிப்பிட்ட சில நாட்கள் வழிபட அனுமதி மறுப்பது வேண்டுமென்றே பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் நடவடிக்கை. தமிழக கோவில்களில் வழிபட தடை விதித்துள்ளவர்களுக்கு மக்களும், மகேசனும் தண்டனை வழங்குவர். கோவில்களில் வழிபட தடை அறிவிப்பை திமுக அரசு உடனே கைவிட வேண்டும். எல்லா நாட்களிலும் பொதுமக்கள் வழிபட கோவில்களை திறந்துவிட வேண்டும் என்று ஹெச்.ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave your comments here...