ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கேரளாவில் இந்த நிதியாண்டில் 30 இலட்சம் புதிய குடிநீர் இணைப்புகள்.!

இந்தியா

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கேரளாவில் இந்த நிதியாண்டில் 30 இலட்சம் புதிய குடிநீர் இணைப்புகள்.!

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கேரளாவில் இந்த நிதியாண்டில் 30 இலட்சம் புதிய குடிநீர் இணைப்புகள்.!

கேரளாவில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ், இந்த நிதியாண்டில் அமல்படுத்தவுள்ள செயல்திட்டத்தை, காணொலிக் காட்சி மூலம் தேசியக் குழுவிடம், கேரள மாநில அதிகாரிகள் தாக்கல் செய்தனர்.

கேரளாவில் 67.15 இலட்சம் கிராமப்புற வீடுகள் உள்ளன. இவற்றில் 21.55 இலட்சம் வீடுகளில் குடிநீர்க் குழாய் இணைப்புகள் உள்ளன. 2020-21ஆம் நிதியாண்டில் சுமார் 4 இலட்சம் குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டன. 2021-22ஆம் நிதியாண்டில் 30 இலட்சம் புதிய குடிநீர்க் குழாய் இணைப்புகளை வழங்க கேரளா திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் வழங்கும் இலக்கை 2024ஆம் ஆண்டுக்குள் அடைய கேரளா திட்டமிட்டுள்ளது. தண்ணீரின் தரம் குறைவாக இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில், இந்தாண்டு ஜூன் மாதத்துக்குள் குடிநீர்க் குழாய் இணைப்பு அல்லது சமுதாயத் தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் மூலம் குடிநீர் வழங்க கேரளா திட்டமிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்குள், ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும், குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவது தான் ஜல்ஜீவன் திட்டத்தின் நோக்கம். இத்திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது தொடங்கி கிராமங்களில் 4.17 கோடி குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கேரள அரசு தாக்கல் செய்த திட்டத்தை, தேசியக் குழு ஆராய்ந்து, திட்டம் குறித்த ஆலோசனைகளை வழங்கியது. ஜல்ஜீவன் திட்டப் பணிகளை, விரைவாக அமல்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளும்படி கேரள அரசை தேசியக் குழு அறிவுறுத்தியது. 2021-22-ஆம் நிதியாண்டில் ஜல்ஜீவன் திட்டத்துக்காக, ரூ.50ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்துக்காக, மேலும், ரூ.26,940 கோடி, 15வது நிதி ஆணையத்தில் மானியமாக உள்ளது. மாநிலங்களின் பங்களிப்புடன், இந்த நிதியாண்டில் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்க ரூ.1 இலட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மிகப் பெரிய முதலீடு கிராமங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், கிராமப் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும்.

Leave your comments here...