பெண்களை அவமதிக்கும் தி.மு.க ஆட்சிக்கு வர தகுதியற்றது – முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரசாரம்.!

அரசியல்

பெண்களை அவமதிக்கும் தி.மு.க ஆட்சிக்கு வர தகுதியற்றது – முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரசாரம்.!

பெண்களை அவமதிக்கும் தி.மு.க ஆட்சிக்கு வர தகுதியற்றது – முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரசாரம்.!

அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கோவை தெற்கு தொகுதியில் பாஜகவின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.

திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தரப்பில் மயூரா எஸ்.ஜெயக்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனுடன் ஆகியோர் இத்தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக களம் இறங்கி உள்ளனர்.

வானதி சீனிவாசனுக்கு  ஆதரவாக  பிரச்சாரம் செய்து, வாக்குச் சேகரிக்க உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று கோவை வந்தார்.நண்பகல் 12 மணிக்குக் கோவை விமான நிலையத்துக்கு வந்த அவரைக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, புலியகுளத்துக்கு வந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார். அப்போது வேட்பாளர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

அதைத் தொடர்ந்து புலியகுளத்தில் கட்சி நிர்வாகிகள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், அங்கிருந்து ஊர்வலமாகப் பிரச்சாரக் கூட்டம் நடக்கும் தேர்முட்டிப் பகுதிக்கு வந்தார். அங்கு பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் ‘கோவை மக்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’ என உரையை துவங்கிய யோகி ஆதித்யநாத் பேசியதாவது:கோவை மண்ணில் இருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெறுவார். ராமரின் புண்ணிய பூமி உத்தரபிரதேசம். உத்தரபிரதேசத்தில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ரூ.120 கோடி நிதி வந்துள்ளது. அதற்காக 130 கோடி மக்கள் சார்பாக தமிழக மண்ணிற்கு நன்றி தெரிவித்து கொள்கின்றேன். சுயசார்பு பாரதத்தை பறைசாற்றும்படி இருக்கும் பிரதமர் மோடியின் பார்வை முழுவதும் தமிழகத்தின் மீது இருக்கிறது. தமிழகத்தில் ராணுவ வழித்தடம் அமைத்து முடிக்கும்போது ஏராளமான வேலை வாய்ப்புகள் பெருகும்.


இந்தியாவில் தற்போது 5 மாநிலங்களில் நடைபெற உள்ள தேர்தலில், அசாம், மேற்குவங்கம் மாநிலங்களில் நிச்சயம் ஆட்சியை பிடிப்போம். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். வளர்ச்சி ஒன்றே நமது தாராக மந்திரமாக கொண்ட ஒரே நோக்கத்தின் அடிப்படையில் பா.ஜ., செயல்படுகின்றது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே புதிய விடியலை ஏற்படுத்தும். இந்தியாவில் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச வீடு, சிலிண்டர், பெண்கள் முன்னேற்றம் போன்றவற்றில் அதிக ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

தூய்மை இந்தியா திட்டத்தில் தமிழகத்திற்கு 54 லட்சம் கழிப்பறைகளை கட்டி கொடுத்துள்ளது மத்திய அரசு. வரும் தேர்தலில் பா.ஜ.,-அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் அதிகபடியாக நிதி மற்றும் திட்டங்கள் தமிழகத்தை வந்து சேரும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கோவையும் இடம் பெற்றுள்ளது. கோவைக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு வழங்கி இருக்கிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி பெண்களை இழிவுபடுத்துகின்றன. பெண்களை அவமதிக்கும் திமுக ஆட்சிக்கு வர தகுதியற்றது. அதிமுக-பாஜக கூட்டணியின் நோக்கம் வேலை வாய்ப்பு, முன்னேற்றம், பெண்களுக்கு பாதுகாப்பு போன்றவைதான். இவ்வாறு அவர் பேசினார்.

Leave your comments here...