நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டிய ஈஷா மஹாசிவராத்திரி.!

ஆன்மிகம்தமிழகம்

நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டிய ஈஷா மஹாசிவராத்திரி.!

நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகளுடன் களைக்கட்டிய ஈஷா மஹாசிவராத்திரி.!

தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல இசை கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஆதியோகி முன்பு கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி போன்ற இந்திய மொழிகள் மட்டுமின்றி ரஷ்யன், சைனீஸ், போர்ச்சுகீஸ், ஸ்பானீஸ் போன்ற வெளிநாட்டு மொழிகளில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. இதன்மூலம், இந்திய ஆன்மீக கலாச்சாரத்தின் மிக முக்கிய விழாவான சிவராத்திரி விழாவில் கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைன் மூலம் பங்கேற்றனர்.

மார்ச் 11-ம் தேதி மாலை 6 மணிக்கு லிங்க பைரவி தேவியின் ஊர்வலத்துடன் விழா இனிதே தொடங்கியது. தியானலிங்கத்தில் பஞ்சபூத க்ரியா நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னர், விழா மேடையில் லிங்க பைரவி தேவிக்கு மஹா ஆரத்தி நடைபெற்றது. இதை தொடர்ந்து, சத்குரு அவர்கள் பல லட்சக்கணக்கான மக்களுக்கு யோகா விஞ்ஞானத்தை பரிமாற உறுதி ஏற்கும் விதமாக மஹா யோக யக்ஞத்தை (வேள்வியை) ஏற்றி வைத்தார்.

சிவனின் அருள் பெற உகந்த இரவு

பின்னர், விழா தொடக்கவுரை ஆற்றிய சத்குரு, “மஹாசிவராத்திரி என்பது சிவனின் அருளை பெறுவதற்கு உகந்த ஒரு மகத்தான இரவாகும். இதை ஓரு குறிப்பிட்ட மதம் சார்ந்த அல்லது நம்பிக்கை சார்ந்த விழாவாக பார்க்க கூடாது. படைத்தலின் மூலமான சிவனின் எல்லையில்லா வெறுமையின் தீவிரத்தை கொண்டாடும் நாள். இன்று கோள்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக மனிதர்களின் உயிர் சக்தியானது இயற்கையாகவே மேல் நோக்கி நகரும்.

ஆகவே, இன்றைய இரவு முழுவதும் முதுகு தண்டை நேராக வைத்து கொண்டு விழிப்பாகவும் விழிப்புணர்வாகவும் இருந்தால் நீங்கள் அளப்பரிய பலன்களை பெற முடியும். ஆரோக்கியம், நல்வாழ்விற்கு மட்டுமின்றி ஒருவரின் முக்திக்கும் இந்நாள் மிகவும் உறுதுணையாக இருக்கும்” என்றார்.

பாரம்பரிய இசை நிகழ்ச்சிகள்

விழாவில் நம் இந்திய பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாகவும், மக்களை இரவு முழுவதும் விழிப்பாக வைத்திருக்கவும் பல்வேறு கலை குழுவினரின் இசை, நடன நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்றன. குறிப்பாக, பிரபல தமிழ் நாட்டுப் புற பாடகர் அந்தோணி தாசனின் பாடல்களுடன், பறை இசை குழுவினரின் பறையாட்டம் அரங்கை அதிர செய்தது. இதேபோல், தெலுங்கு பாடகி மங்களி அவர்களின் பாடல்களும், ராஜஸ்தானிய கலைஞர் குட்லே கானின் கிராமிய பாடல்களும், சந்தீப் நாராயணின் கர்னாடக சங்கீதமும் பங்கேற்பாளர்களை பரவசத்தில்m ஆழ்த்தியது.

இதுதவிர, பாலிவுட் வட்டாரத்தில் பிரபலமான கபீர் கஃபே குழுவினர் மற்றும் பின்னணி பாடகர் பார்த்திவ் கோஹில் குழுவினர் நடத்திய இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. மேலும், சவுண்ட் ஆஃப் ஈஷா குழுவின் பாடல்களும், சம்ஸ்கிரிதி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் மக்களின் மனங்களை கொள்ளை கொண்டது. நள்ளிரவில் கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சியும் நடைபெற்றது.

சத்குருவுடன் நள்ளிரவு தியானம்

இதனிடையே, நள்ளிரவு மற்றும் பிரம்ம முஹூர்த்த நேரத்தில் சத்குருவுடனான சக்திவாய்ந்த தியானங்கள் மக்களுக்கு ஆழந்த ஆன்மீக அனுபவத்தை தந்தது. மேலும், விழாவின் ஒரு முக்கிய நிகழ்வாக பாரம்பரிய நாட்டு மாடுகளுக்கு சத்குரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அத்துடன் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வெற்றிக்கும், அந்நிறுவனத்தின் விவசாயிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் தொடர்ந்து வழிகாட்டி வரும் சத்குருவுக்கு நன்றி கூறினர்.

வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்களே விழாவில் நேரில் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அதன் அறிக்கையை சமர்ப்பித்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அரசின் வழிகாட்டுதல் படி பல்வேறு முன் திட்டமிடல்களுடன் விழா மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

Leave your comments here...