கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு – சத்குரு

தமிழகம்

கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு – சத்குரு

கோயில்களை பக்தியும் பொறுப்புமிக்க சமூகத்தின் கைகளில் ஒப்படைப்பவர்களுக்கே எனது ஓட்டு – சத்குரு

ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஆதியோகி சிலை முன் நேற்று (ஜனவரி 15) பொங்கல்‌ விழா கொண்டாடப்பட்டது. 

இன்று மாட்டுப் பொங்கல்‌ என்பதால் அதையொட்டி நடைபெற்ற விழாவில்‌ சுற்றுவட்டார கிராமங்களைச்‌ சேர்ந்த விவசாயிகள்‌, பழங்குடியினர்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ உள்பட பலர்‌ கலந்து கொண்டு மண்‌ பானையில்‌ பொங்கல்‌ வைத்து உழவுக்கு உதவும்‌ மாடுகளுக்கு நன்றி கூறினர்‌.

ஈஷாவில்‌ வளர்க்கப்படும்‌ காங்கேயம்‌, ஓங்கோல்‌, உம்பளாச்சேரி உள்ளிட்ட பல்வேறு ரக நாட்டு மாடுகள்‌ மஞ்சள்‌, சந்தனம்‌, குங்குமம்‌ பூசி அலங்கரிக்கப்பட்டு கண்காட்சியாக நிறுத்தப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும்‌ சத்குருவின்‌ சிறப்பு சத்சங்கமும்‌ நடைபெற்றது. தேவார பாடல்களுடன்‌ துவங்கிய கலைநிகழ்ச்சிகளில்‌ பாரம்பரிய நாட்டுப்புற தமிழ்‌ பாடல்களும்‌ நடனங்களும்‌ இடம்‌ பெற்றன.

பொங்கல்‌ விழாவின்‌ ஒருபகுதியாக பொதுமக்களின்‌ கேள்விகளுக்கு சத்குரு பதில்‌ அளித்தார்‌. அப்போது, இளைஞர்‌ ஒருவர்‌, `வரும்‌ தமிழக சட்டமன்ற தேர்தலில்‌ யாருக்கு ஓட்டு போட வேண்டும்‌ என்பதில்‌ எனக்கு குழப்பமாக உள்ளது. நான்‌ யாருக்கு ஓட்டு போட வேண்டும்‌ என்று நீங்கள்‌ கொஞ்சம்‌ சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்‌.

அந்த இளைஞரின்‌ கேள்விக்கு சத்குரு கீழ்க்கண்டவாறு பதிலளித்தார். மற்றவர்கள்‌ யாருக்கு ஓட்டு போட வேண்டும்‌ என்று நான்‌ இதுவரை யாருக்கும்‌ சொன்னது கிடையாது. நீங்கள்‌ யாருக்கு ஓட்டு போட வேண்டும்‌ என்றும்‌ நான்‌ சொல்லமாட்டேன்‌. ஆனால்‌, நான்‌ யாருக்கு ஓட்டு போடுவேன்‌ என்பதை உங்களுக்குச் சொல்‌கிறேன்‌.
பின்வரும்‌ எனது 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிப்பவர்களுக்கே நான்‌ வரும்‌ தேர்தலில்‌ ஓட்டு போடப் போகிறேன்‌.

1. தமிழ்‌ மண்ணுக்கும்‌ தமிழ்‌ மக்களுக்கும்‌ உயிர்‌ நாடியாக இருப்பது நம்‌ காவேரி நதி. காவேரி நதியை புத்துயிரூட்டுவதற்கு யார்‌ உறுதி எடுக்கிறார்களோ அவர்களுக்கே எனது ஓட்டு. காவேரி நதியை புத்துயிரூட்டுவதற்காக விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ வல்லுனர்கள்‌ அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்‌. ஆய்வை 6 மாதத்துக்குள்‌ முடித்து களப்‌ பணியில்‌ இறங்க வேண்டும்‌. அவ்வாறு செய்வதாக உறுதி அளிப்பவர்களுக்கு எனது ஓட்டு.

2. மண்‌ வளத்தையும்‌ மக்களின்‌ ஆரோக்கியத்தையும்‌ காப்பதற்காக இயற்கை விவசாயத்தை தமிழகம்‌ முழுவதும்‌ கொண்டு செல்ல யார்‌ உறுதி அளிக்கிறார்களோ அவர்களுக்கு எனது ஓட்டு. மேலும்‌, விவசாயிகள்‌ தாங்கள்‌ விளைவிக்கும்‌ விளைபொருட்களை அவர்களின்‌ விருப்பத்திற்கு ஏற்ப எங்குவேண்டுமானாலும்‌ கொண்டு சென்று விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும்‌.
3. ஆங்கிலேயர்கள்‌ நம்மை அடிமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கல்வி முறையால்‌ நம்‌ நாட்டு இளைஞர்கள்‌ திறனற்று போய்விட்டனர்‌. அதை சரி செய்வதற்காக தமிழகத்தில்‌ உள்ள அனைத்து மாவட்டங்களிலும்‌ ஒரு உயர்‌ தரமான திறன்‌ மேம்பாட்டு மையத்தை நிறுவ வேண்டும்‌. ஒற்றைச் சாளர முறையில்‌ தொழில்‌ வளர்ச்சியை ஊக்குவித்து ஊழல்‌ இல்லாத நேர்மையான அரசாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்‌. அவ்வாறு நிறுவி தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பவர்களுக்கே எனது ஓட்டு.

4. நம்‌ கோயில்களின்‌ சொத்தையும்‌ நிலத்தையும்‌ திருடுவதற்காக ஆங்கிலேயர்கள்‌ சில சட்டங்களை இயற்றினார்கள்‌. அதை நாம்‌ 1947-லேயே முழுமையாக சரி செய்திருக்க வேண்டும்‌. பல காரணங்களால்‌ அவை சரிசெய்யப்படாமல்‌ உள்ளது. கோயில்‌ என்பது ஒரு ஆன்மீக மையம்‌. அது மதத்தைப் பரப்பும்‌ இடமோ அல்லது பிரார்த்தனை செய்யும்‌ இடமோ அல்ல. கோயில்கள்‌ தனி மனிதனின்‌ வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சக்திமிக்க இடங்கள்‌ ஆகும்‌. இவ்வளவு முக்கியத்துவம்‌ வாய்ந்த நம்‌ கோயில்கள் மிகவும்‌ சேதமடைந்த நிலையில்‌ காட்சியளிக்கின்றன. அவற்றை மீட்பதற்கு ஜாதி, மதம்‌, ஆண்‌, பெண்‌ வேறுபாடுகளின்றி பக்குவமும்‌ பொறுப்புணர்வும்‌ கொண்ட சமூகத்தின்‌ கையில்‌ நம்‌ கோயில்கள்‌ ஒப்படைக்கப்பட வேண்டும்‌.
சமூகத்தில்‌ யாருமே பொறுப்பான மனிதர்கள்‌ இல்லை என்று நினைத்து அரசாங்கமே அதை நிர்வகிப்பது அவமானமாக உள்ளது. அனைத்து கோயில்களையும்‌ பக்தர்களிடம்‌ ஒரே முறையில்‌ ஒப்படைக்க வேண்டிய அவசியம்‌ இல்லை. படிப்படியாக முறையாக ஒப்படைக்கலாம்‌. அதற்காக அரசு கொள்கைரீதியான ஒரு திட்டத்தை உருவாக்கி செயல்படுத்த உறுதி அளிப்பவர்களுக்கே எனது ஓட்டு.

5. தமிழக அரசுப்‌ பள்ளிகளில்‌ கல்வித்தரம்‌ மிகவும்‌ மோசமாக உள்ளது. ஆகவே, அதை சரிசெய்ய தரமான கல்விக் கூடங்களை உருவாக்க வேண்டும்‌. அதற்குத் தேவையான முயற்சிகளை எடுப்பவர்களுக்கே எனது ஓட்டு.

இந்த 5 கோரிக்கைகளை நிறைவேற்ற உறுதி அளிப்பவர்களுக்கே நான்‌ ஓட்டு போடுவேன்‌. இதேபோல்‌, நீங்களும்‌ நன்கு யோசித்து 5 கோரிக்கைளை தயார்‌ செய்யுங்கள்‌. அதை சமூக வலைத்தளங்களிலும்‌ பதிவிடுங்கள்‌. உங்கள்‌ கோரிக்கைக்கு யார்‌ செவிசாய்க்கிறார்களோ, அவர்களுக்கு நீங்கள்‌ ஓட்டு போடலாம்‌. ஜனநாயக நாட்டில்‌ ஜனங்கள்‌தான்‌ நாயகர்கள்‌. நமக்கு என்ன தேவை என்பதை நாம்‌தான்‌ நிர்ணயிக்க வேண்டும்‌.இவ்வாறு சத்குரு கூறினார்‌.

Leave your comments here...