திண்டுக்கல்லில் நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியல்.!

சமூக நலன்தமிழகம்

திண்டுக்கல்லில் நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியல்.!

திண்டுக்கல்லில் நிவாரணம் கேட்டு நாடக நடிகர்கள் சாலை மறியல்.!

திண்டுக்கல்லில் சுமார் 250 நாடக நடிகர்கள் உள்ளனர். நாடக தொழில் நலிவடைந்து விட்டதால், போதிய வருமானமின்றி தவிக்கின்றனர். இதனால் கோவில் திருவிழாக்களில் நடத்தப்படும் புராணம், சமூக நாடகங்கள் மூலம் சொற்ப வருமானத்தை ஈட்டி வந்தனர்.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் கோவில்கள் கடந்த 5 மாதங்களாக திறக்கப்பட வில்லை. கோவில் திருவிழாக்களும் நடைபெறவில்லை. இதனால் நாடக நடிகர்கள் வேலையின்றி வருமானத்தை இழந்தனர். எனவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திண்டுக்கல் நாடக நடிகர்கள் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். எனினும், நிவாரணம் வழங்கப்படவில்லை. இதனால் நாடக நடிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று திண்டுக்கல் சாலை ரோடு பகுதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நாடக நடிகர்கள் திரண்டனர். இதையடுத்து சங்க அலுவலகத்தில் இருந்து சாலை ரோட்டுக்கு வந்த அவர்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அதில் சில நடிகர்கள் வேடம் அணிந்து இருந்தனர். இந்த மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நாடக நடிகர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கோவில் திருவிழாவில் நாடகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும், திண்டுக்கல்லில் கலை பண்பாட்டு மையம் அமைத்தல் மற்றும் வயதான நடிகர்களுக்கு தாமதமின்றி உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நாடக நடிகர்கள் வலியுறுத்தினர். இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நாடக நடிகர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave your comments here...