பிரதமர் மோடியின் அன்பளிப்பாக வந்த பரிசு பொருட்களை ஏலம் விட்டதில், அரசிற்கு 15கோடி ரூபாய் வருமானம்-மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல்

Scroll Down To Discover

பிரதமர் மோடி செல்லும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணங்களின் போது பல தலைவர்களை சந்திக்கிறார்.  அந்த சந்திப்பின் போது பலரும் அவருக்கு அன்பளிப்பாக நினைவு பரிசுகள் பலவற்றை வழங்குகின்றனர். இதுதவிர உள்நாட்டிலும் அவரை சந்திக்கவரும் பிரமுகர்களும் மோடிக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு பெறப்படும் அன்பளிப்புகள் மத்திய அரசால் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம்.

முன்னதாக பிரதமர் மோடி இது குறித்து கடந்த செப்டம்பர் மாதம்,  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த ஒரு வருடமாக எனக்கு அளிக்கப்பட்ட அன்பளிப்புகள் ஏலத்திற்கு வருகிறது. இதில் கிடைக்கப்படும் நிதியை கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கிடைத்த அன்பளிப்புகள் மற்றும் அதன் மூலம் கிடைத்த வருவாய் தொடர்பாக இன்று பாராளுமன்ற மாநிலங்களவையில் ஒரு உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதிலளித்த மத்திய கலாச்சாரத்துறை மந்திரி பிரகலாத் பட்டேல்:- ”பிரதமர் மோடிக்கு 2014 முதல் இதுவரை கிடைத்த அன்பளிப்புகள் 3 முறை ஏலம் விடப்பட்டுள்ளன. இதன் மூலம் 15 கோடியே 13 லட்சம் ரூபாய் மத்திய அரசுக்கு வருமானமாக கிடைத்துள்ளது. இந்த தொகை முழுவதும் கங்கை நதி தூய்மை செய்யும் திட்டத்திற்கு நிதியாக வழங்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.