பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்த ரூ.2,900 கோடி ஒப்பந்தம் ரத்து: பிஹார் அரசு அதிரடி ..!

இந்தியா

பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்த ரூ.2,900 கோடி ஒப்பந்தம் ரத்து: பிஹார் அரசு அதிரடி ..!

பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்த ரூ.2,900 கோடி ஒப்பந்தம் ரத்து: பிஹார் அரசு அதிரடி ..!

பிஹார் தலைநகர் பாட்னாவில் கங்கை நதிக்கு குறுக்கே மகாத்மா காந்தி பாலம் கட்டுவதற்காக சீன நிறுவனங்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்து பிஹார் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் லடாக்கின் கல்வான் பகுதியில் ஐந்து வாரங்களாக இந்திய – சீன படைகள் முகாமிட்டிருந்த நிலையில்,( ஜூன் 15) மாலையில், திடீரென மோதல் ஏற்பட்டது. சீன ராணுவம் நடத்திய அட்டூழிய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீரமரணம் அடைந்தனர். எல்லையில் உள்ள நிலையை மாற்றியமைக்க முயன்ற நம் ராணுவத்திற்கு பதிலடி கொடுத்தனர். இதில் 43 சீன வீரர்கள் உயிரிழந்தனர். இதனால், இரு நாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, நாடு முழுவதும், சீன பொருட்களை (Boycott China) புறக்கணியுங்கள் என அறைகூவல் விடுக்கப்படுகிறது. மக்கள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கோபம் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டது.சீன உபகரணங்களை பயன்படுத்தப்போவதில்லை என இந்திய ரயில்வே துறையும், பிஎஸ்என்எல் நிறுவனமும் முடிவு செய்துள்ளன. மேலும், உ.பி மாநிலத்தில் ரயில்வே பணிகளுக்காக சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.மஹாராஷ்டிரா அரசு, சீன நிறுவனங்களுடன் ரூ.5 ஆயிரம் கோடியில் செய்திருந்த பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் பீகாரில் பாலம் கட்ட இரு சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ரூ.2,900 கோடி ஒப்பந்தத்தை அம்மாநில அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. பாட்னாவில் கங்கை நதியின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலை-19 இணைக்கும் வகையிலும் 4 வழிப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இது ஒரு ரயில்வே மேம்பாலம், 4 சிறிய பாலங்கள், 13 சாலைகளை இணைக்கும் பாலம், பேருந்துகள் நிறுத்தும் 5 நிறுத்தங்கள் என மிகப்பெரிய திட்டமாகும். இந்த பாலம் ஏறக்குறைய 5.63 கி.மீ தொலைவு கொண்டதாக ரூ.2,900 கோடி திட்ட மதிப்பில் வடிவமைக்கப்பட்டது.இந்த திட்டத்துக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. டெண்டர் அடிப்படையில் இரு நிறுவனங்கள் இந்த திட்டத்துக்காக பீகார் அரசு தேர்வு செய்திருந்தது. அந்த இரு நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை நடத்த முடிவு செய்ததால் இந்த ஒப்பந்தத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

இது குறித்து பீகார் மாநில சாலைப் போக்குவரத்து அமைச்சர் நந்த் கிஷோர் கூறுகையில்:- “பாட்னாவில் கங்கை நிதியின் குறுக்கே 5 கி.மீ தொலைவுக்கு பாலம் கட்ட 2900 கோடி ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்கி இருந்தோம்.அந்த இரு நிருவனங்களும் சீனாவின் ‘சைனா ஹார்பர் எஞ்சினியரிங் கம்பெனி, ஷான்க்ஸி ரோட் பிரிட்ஜ் கம்பெனி ஆகிய நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த திட்டத்தை செயற்படுத்த இருந்தன.நாங்கள் இந்த இரு சீன நிறுவனங்கள் இல்லாமல் திட்டத்தை செயற்படுத்த கோரினோம். அதற்கு அந்த இரு நிறுவனங்களும் மறுத்ததால் ஒப்பந்தத்தை இரத்து செய்துள்ளோம். மீண்டும் புதிதாக டெண்டர் விடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave your comments here...