நாகர்கோவில் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக சுரேஷ்ராஜன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளராக எம்.ஆர்.காந்தி களமிறங்கினார். தொகுதியின் எம்.எல்.ஏ.வான சுரேஷ்ராஜன், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ளார். ஏற்கனவே தி.மு.க. ஆட்சியின் போது அமைச்சராகவும் இருந்தவர்.
மேலும் எம்.ஆர்.காந்தி பா.ஜ.க. மூத்த தலைவராகவும் இருப்பதால் நாகர்கோவில் தொகுதி வி.ஐ.பி. தொகுதியாக கருதப்பட்டது. இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. தொடக்க சுற்றுகளில் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜன் முன்னணியில் இருந்தார். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் சுரேஷ்ராஜனை விட அதிக வாக்குகளை பெற்று முன்னணிக்கு வந்த எம்.ஆர்.காந்தி இறுதியில் வெற்றி கனியை பறித்து விட்டார். 11,669 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் சுரேஷ்ராஜனை தோற்கடித்தார்.
இதன் மூலம் முதன்முறையாக எம்.ஆர்.காந்தி சட்டசபைக்குள் நுழைகிறார். தமிழகத்தில் பா.ஜ.க.வை சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் எம்.ஆர்.காந்தியும் ஒருவர்.
யார் இந்த எம்.ஆர்.காந்தி:-
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரை சேர்ந்தவர் எம்.ஆர் காந்தி. சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர் திருமணம் செய்யாமல் தேச பணிக்காக தன்னை அர்ப்பணம் செய்தவர். அரசியல் ரீதியாக பாஜக என்ற கட்சி தொடங்கும் முன்னரே, தனது இந்து ஆதரவு போராட்டங்களால், நாகர்கோவிலில் நன்கு அறியப்பட்டவர் இவர். எவ்வித சர்ச்சையிலும் சிக்காமல், தனது அரசியல் வாழ்க்கையில் நேர்மையைக் கடைபிடிப்பவர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கு முதல் தூணாக திகழ்ந்த இவர் காமராஜரை போன்று ஆளுயர சட்டை வேட்டி அணிந்து சர்வ சாதாரணமாக வலம் வருவார், இவரை குமரி மாவட்டத்தை சேர்ந்த பாஜகவினர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களும் குமரியின் குட்டி காமராஜர் என்று அழைப்பார்கள்.எளிமையின் சிகரமாக திகழும் இவர் ஏழைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தட்டிக்கேட்கும் முதல் மனிதனாகவும் இருப்பார்.
2013-ம் ஆண்டு (21-04-2013)வாக்கிங் சென்ற அவரை வழிமறித்து கொலை செய்யும் நோக்கில் கொலைவெறி தாக்குதல் நடத்தியது ஒரு கும்பல். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கு ஒரு சிறிய பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக வந்து நிற்கும் நபராக ஐயா எம்.ஆர்.காந்தி இருந்தார்
இவர் கடந்த 1980, 89 மற்றும் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியிலும், 1984, 2006-ம் ஆண்டு குளச்சல் தொகுதியிலும், 2011-ம் ஆண்டு கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 முறை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.ஆர்.காந்தி, 7-வது முறை தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.இதுவரை தொடர் தோல்விகளை மட்டும் சந்தித்து வந்த எம்.ஆர்.காந்தி தனது 75-வது வயதில் முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகிறார்.
1996-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட சி.வேலாயுதம் என்பவர் குமரி மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 25 ஆண்டுகளுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் இருந்து பா.ஜ.க. பிரதிநிதியாக எம்.ஆர்.காந்தி சட்டசபைக்குள் செல்கிறார்.
NEWS:- GOKUL PSV

														
														
														
Leave your comments here...