ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு உத்தரவு
- October 9, 2019
- jananesan
- : 1035

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த வகையில், அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி.வினய், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்ட ஆட்சியராக டி. ரத்னா நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபாலின் பதவிக்காலம் முடிந்ததையடுத்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளராக ஜே.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசு போக்குவரத்து முதன்மை கழக செயலாளராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.சுற்றுலா மற்றும் கலாச்சாரதுறையின் கூடுதல் தலைமைச் செயலராக அசோக் டோங்ரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை செயலர் தீரஜ்குமார் எரிசக்தி துறையை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற நிதி கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவராக அபூர்வ வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பத்துறை செயலராக இருந்த சந்தோஷ் பாபுவுக்கு கைவினை பொருட்கள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக இணை மேலாண் இயக்குநராக எஸ். வினீத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.