அக்னி குண்டம் இறங்குவது ஏன்..?
- August 14, 2019
- jananesan
- : 1896
![அக்னி குண்டம் இறங்குவது ஏன்..?](https://www.jananesan.com/wp-content/uploads/2019/08/ER04KUNDAM.jpg)
தேவியின் அம்சங்களில் ரேணுகாதேவி என்ற ஒரு அக்கினி சக்தி மாரியம்மன், ஜமத்கனி என்னும் ரிஷியின் பத்தினியே ரேணுகாதேவி. கார்த்தவீரியன் என்னும் பேரரசன் ஜமத்கனி, முனிவரிடம் இருந்த காமதேனு என்ற தெய்வீகப் பசுவை அபகரிக்க முயற்சித்த போது அதைத் தடுத்த முனிவரை கார்த்தவீரியன் தாக்கினான். இதைக் கண்ட முனிவர் மகன் பரசுராமன் தனது ஆயுதங்களால் கார்த்தவீரியனை வெட்டி சாய்த்தான். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஜமத்கனி முனிவரைக் கொன்றனர். இறந்து போன கணவனின் உடலை எரிக்கும் போது மனைவி ரேணுகாதேவியும் உடன்கட்டை ஏறுகிறார். தீயில் வெந்து கொண்டிருப்பதை அறிந்த சிவபெருமான் மழையைப் பொழிய வைத்து தீயை அணைத்தார். சிவபெருமான் ரேணுகா தேவியிடம் இப்பொழுது நடந்த சம்பவம் பூலோகத்தில் உள்ள மக்கள் உன்னையும், உனது மகிமையையும் அறிவதற்கான சக்தி தேவியின் விளையாட்டு, மண்ணுலகில் தங்கியிருந்து கிராம தேவதையாக மாரியம்மன் என்ற பெயரில் மக்களுக்கு அருள் புரிவாயாக எனக் கட்டளையிட்டார். ரேணுகா தேவி தன் கணவர் ஜமத்கனி முனிவர் இறந்ததால் அக்கினியில் குதித்தால் உடல் முழுவதும் வெந்து போனது. இதன் அடையாளமாக பக்தர்கள் தமது கால்களையாவது அக்னியில் வைத்து அம்மனை வேண்டிக் கொண்டு அக்னி குண்டத்தில் நடப்பது வழக்கமாக உள்ளது.
அதிதீவிர பக்தியும், அம்மனுக்கு ஒரு காணிக்கை என்ற நம்பிக்கையில் தான் மாரியம்மன் விழாவில் பக்தர்கள் அக்னியை மலராக நினைத்துக் நடக்கின்றனர். அம்மன் தெய்வீக சக்தியால் பக்தர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவதில்லை. அதனால் தான் தீ மிதித்தலை பூ மிதித்தல் எனக் கூறுகிறோம்.