கொரோனா முன்னெச்சரிக்கை- மின் கட்டணம் செலுத்த சலுகை

தமிழகம்

கொரோனா முன்னெச்சரிக்கை- மின் கட்டணம் செலுத்த சலுகை

கொரோனா முன்னெச்சரிக்கை- மின் கட்டணம் செலுத்த சலுகை

தமிழகத்தில், வீடுகள், கடைகள் உள்ளிட்ட தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில், மின் ஊழியர்கள், இரு மாதங்களுக்கு, ஒருமுறை நேரில் சென்று மின் பயன்பாடு கணக்கு எடுக்கின்றனர். கணக்கு எடுத்த 20 தினங்களுக்குள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும். இல்லையேல், மின் வினியோகம் துண்டிக்கப்படும். பின், அபராதத்துடன், கட்டணம் செலுத்தியதும், மீண்டும் மின் வினியோகம் வழங்கப்படும்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ள, பலரும் வீடுகளை விட்டு வெளியே வருவதில்லை. இதனால், மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என ஊழியர்கள், மின் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தனர். எனவே, இம்மாதம் கட்டணம் செலுத்த வேண்டியவர்கள், முந்தைய மாத கட்டணத்தையே செலுத்துமாறு, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து மின் வாரியம், நேற்று (மார்ச் 22) விடுத்த செய்தி குறிப்பு:- கொரோனா வைரஸ் பரவல் பீதி காரணமாக, தாழ்வழுத்த இணைப்புகளில், 2020 மார்ச் மாத பட்டியலுக்கு, 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை, ‘மீட்டர் ரீடிங்’ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், ஜனவரி, பிப்., மாத கணக்கீட்டின்படி, பணம் செலுத்த கோரப்படுகிறது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும். மின் கட்டண மையங்களுக்கு வருவதை தவிர்த்து, ஏற்கனவே தெரிவித்தபடி, இணையதளம், மொபைல் செயலி போன்ற, ‘டிஜிட்டல்’ முறையில் மின் கட்டணத்தை செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Leave your comments here...