பஞ்சலோக கிருஷ்ணர் சிலை விற்க முயற்சி – இருவர் கைது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

சென்னை அருகே, வலது கை அறுக்கப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, பஞ்சலோக கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டுள்ளனர். சென்னையை அடுத்த திரிசூலம் பகுதியில் பஞ்சலோக சிலைகள் விற்க முயற்சிகள் நடப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங் உத்தரவின்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. அன்பு மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி, கூடுதல் சூப்பிரண்டு ஜோஷ் தங்கையா தலைமையில் துணை சூப்பிரண்டு சுந்தரம் மற்றும் போலீசார் கொண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படையினர் திரிசூலத்தில் ஜி.எஸ்.டி. சாலையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது திரிசூலம் ரெயில்வே கேட் அருகே சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேரை மடக்கிப்பிடித்தனர்.விசாரணையில் அவர்கள், திரிசூலம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த கோட்டைச்சாமி(வயது 47), ஜமீன் பல்லாவரம் கச்சேரி மலையைச்சேர்ந்த சுரேஷ்(43) என்பது தெரிய வந்தது.தனிப்படை போலீசார் 2 பேரிடம் இருந்த பையை பிரித்து பார்த்தபோது அதில் உலோக கிருஷ்ணர் சிலை இருந்தது. நின்ற நிலையில் சுமார் 1 அடி உயரமுள்ள பீடத்துடன் கூடிய அந்த கிருஷ்ணர் சிலையின் வலது முழங்கை அறுக்கப்பட்டு இருந்தது. அந்த சிலையை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் கணித்துள்ளனர்.இதையடுத்து, சிலை கடத்தலில் ஈடுபட்ட, திரிசூலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, கோட்டைசாமி, 47; ஜமீன் பல்லாவரம், கச்சேரி மலையைச் சேர்ந்த, சுரேஷ், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணர் சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது; அதன் கையை அறுத்தவர்கள் யார்; அதன் பின்னணியில் இருப்போர் யார் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Leave your comments here...