4,200 புதிய பேருந்துகள் வாங்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு..!

Scroll Down To Discover

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 4,200 பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் அமைச்சர் சிவசங்கர் கூறினார்

கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் 61வது நினைவு தினத்தையொட்டி திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக அவர் அளித்த பேட்டி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகள் வசதிக்காக தாம்பரத்துக்கு 2 நிமிடத்துக்கு ஒரு முறையும், கிண்டிக்கு 3 நிமிடத்திற்கு ஒரு முறையும், கோயம்பேட்டுக்கு 5 நிமிடங்களுக்கு ஒரு முறையும் மாநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தனி வாகனங்களில் செல்ல விரும்பும் பயணிகளுக்காக ஆட்டோ மற்றும் டாக்ஸி முன்பதிவு செய்து பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மூலம் வரும் பிப்.7ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் முதல்வரின் திட்டங்களை இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் உற்று கவனித்து வருகின்றன. நீண்ட தூர பயணத்துக்கு 1666 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகளை முதல்வர் துவக்கி வைத்துள்ளார்.

இதேபோல் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 200 புதிய பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. மொத்தத்தில் 4200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.