காசா முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

நாங்கள் போரை கைவிட மாட்டோம். காசாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்’ என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் படையினருக்கும் இடையே கடந்த 2023ல் துவங்கிய போர் இன்னும் நீடித்து வருகிறது. காசாவில், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை துவங்கியுள்ளது.இதில், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று (மே 19) வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:சண்டை தீவிரமாக உள்ளது. நாங்கள் முன்னேறி வருகிறோம். காசாவின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம்.
நாங்கள் போரை கைவிட மாட்டோம். வெற்றியை நோக்கி பயணிப்போம்.அதே நேரத்தில், பஞ்சத்தைத் தடுக்க காசா பகுதிக்குள் மனிதாபிமான அடிப்படையில் உணவு அளிக்க அனுமதிக்கப்படும்.
காசா மக்கள் உணவின்றி பஞ்சத்தில் மூழ்க அனுமதிக்கக் கூடாது. இஸ்ரேல் மக்கள் கூட, பட்டினியால் காசா மக்கள் அவதிப்பட்டு வருவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
Leave your comments here...