விழிஞ்சம் துறைமுக திறப்பு விழா.. பலர் தூக்கத்தை இழப்பார்கள் – பிரதமர் மோடி பேச்சு..!

விழிஞ்சம் துறைமுக திறப்பு விழாவை பார்க்கும் பலருக்கு தூக்கம் பறிபோயிருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. விழிஞ்ஞம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் எம்.பி.சசிதரூர், தொழில் அதிபர் கவுதம் அதானி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் இந்த சர்வதேச துறைமுகம் கட்டப்பட்டுள்ளது. அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடியில் இந்த சர்வதேச துறைமுகம் அமைத்துள்ளது. சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் துறைமுகம் உள்ளது.
நவீன வசதிகள் மூலம் மாதத்திற்கு சுமார் 1 லட்சம் சரக்கு கண்டெய்னர்களை கையாள முடியும்.
நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமான இங்கே, கடந்த 3 மாதங்களாக பரிசோதனை முறையில் சரக்குகள் கையாளப்பட்டதில், 272க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் வந்து சென்றன.
இந்த துறைமுகத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து பேசியதாவது: விழிஞ்சம் துறைமுகம் கேரள மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவின் கடலோர மாநிலங்கள், துறைமுக நகரங்கள் முக்கிய வளர்ச்சி மையமாக மாறும். பெரிய சரக்குக் கப்பல்களை நிறுத்த இடமளிக்கும் வகையில் துறைமுகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, சிங்கப்பூர் போன்ற துறைமுகங்களை இந்தியா சார்ந்திருப்பதை விழிஞ்ஞம் துறைமுகம் குறைக்கும் என்றும் கூறினார்.
கடந்த மாதம் பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் நான் இந்த துறைமுகத்தை தொடங்குகிறேன். அவர்களின் இழப்பு, தேச விரோத மற்றும் பிளவுபடுத்தும் சக்திகளிடமிருந்து நமது நாட்டைப் பாதுகாப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை நமக்கு நினைவூட்டுகிறது. முதல்வர் பினராயி விஜயன் இண்டி கூட்டணியின் முக்கியமான தூண். பினராயி விஜயனும், சசி தரூரும் பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள். முன்னர் வெளிநாடுகளில் செலவிடப்பட்ட நிதிகள் இப்போது உள்நாட்டு வளர்ச்சிக்குச் செலவிடப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பின்னர் கேரள முதல்வர் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று பேசியதாவது, ‘துறைமுகத்தைத் திறந்து வைக்க வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை கேரள அரசும், என் சார்பாகவும் அன்புடன் வரவேற்கிறேன். இது நம் அனைவருக்கும் பெருமையான தருணம். பிரதமரின் வருகை இந்த நிகழ்வை இன்னும் சிறப்பானதாக்குகிறது. மேலும் நம் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. இது இந்தத் துறைமுகத்தின் பிரகாசமான எதிர்காலம் குறித்து எங்களுக்கு நம்பிக்கையையும் தருகிறது’ என்றார்.
Leave your comments here...