பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்து தர வேண்டும்: முதல்வருக்கு அர்ஜூன் சம்பத் கோரிக்கை..!

பொங்கல் திருவிழா, ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், சேவற்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு சார்பில் செய்து தர வேண்டுமென்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியீட்டு உள்ள அறிக்கையில்:- தமிழ்நாட்டின் பாரம்பரியப் பண்டிகை பொங்கல் திருவிழா. இந்த தமிழர் திருவிழாவையொட்டி தமிழகமெங்கும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, கிடாய் முட்டு, ரேக்ளாரேஸ், சிலம்பு, கபடி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடப்பது வழக்கம். இந்தப் போட்டிகள் தமிழ் இந்து இளைஞர்களின் வீரத்தையும், சாதுர்யத்தையும் வளர்ப்பதாகவும், நமது இயற்கை விவசாய முறைகளுக்கு தேவையான கோழி, ஆடு, மாடு மற்றும் காளை மாடுகளை பாதுகாப்பதாகவும் அமைந்துள்ளன.
இந்நிலையில் பிராணிகள் பாதுகாப்பு என்ற பெயரில் ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு, கிடாய்முட்டு போன்ற நமது பாரம்பரிய விளையாட்டுக்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இது நமது தமிழ் இந்துப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் மிகவும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு சாதகமாக சட்டம் கொண்டுவந்த போதும் இன்னும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உண்டான ஏற்பாடுகளை மாநில மாவட்ட நிர்வாகங்கள் துவக்கவில்லை. சேவற்கட்டு, கிடாய் முட்டு, ரேக்ளாரேஸ், சிலம்பு, கபடி போன்ற விளையாட்டுக்களை நடத்துவதற்கு பல தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். அலங்காநல்லூர், சிராவயல் உள்ளிட்ட சில பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்குண்டான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் பல்வேறு விதமான தடைகள் உருவாகி உள்ளன.
இத்தகைய தடைகளை உரிய முறையில் மாற்றி அமைத்து ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஈரோடு, கரூர், திருப்பூர், திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம பகுதிகளில், சேவற்கட்டு, கிடாய் சண்டை, ரேக்ளா ரேஸ் உள்ளிட்டவை நடத்துவதற்கும் பலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
நமது பாரம்பரிய நாட்டு இன காளைகளை பாதுகாத்திட கோரியும், ஜல்லிக்கட்டு, சேவற்கட்டு மற்றும் ரேக்ளா பந்தயங்களுக்கு தகுந்த அனுமதியும் பாதுகாப்பும் அளித்திட கோரியும் தமிழக மெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மாணிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் இது விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.!
Leave your comments here...