33 ஆண்டுகளுக்கு முன் விவேகானந்தர் மண்டபத்துக்கு வந்த மோடி – வைரலாகும் புகைப்படம்…!

Scroll Down To Discover

பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் முடிந்ததும் பிரதமர் மோடி, தமிழகத்தின் தென்கோடியில் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு நேற்று மாலை வந்தார். தொடர்ந்து அவர் கன்னியாகுமரி கடலில் உள்ள பாறையில் அமைக்கப்பட்டு இருக்கும் விவேகானந்தர் நினைவிடத்துக்கு சென்று, தனது 3 நாள் தியானத்தை தொடங்கினார்.

இந்தநிலையில் பிரதமர் மோடி கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்னர், இதே விவேகானந்தர் நினைவிடத்துக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்குள்ள விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளியாகி, வைரலாகியுள்ளது.

அதாவது கடந்த 1991-ம் ஆண்டு பா.ஜனதா மூத்த தலைவர் முரளிமனோகர் ஜோஷி, ஏக்தா யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு தேசிய கொடி யாத்திரையை தொடங்கினார்.

1991-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கும் முன், விவேகானந்தர் பாறைக்கு வந்த அவருடன், அப்போது இளம் தலைவராக இருந்த மோடியும் வந்திருந்தார்.அவர்கள் இருவரும் விவேகானந்தர் சிலையை பார்வையிடும் புகைப்படம்தான் தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.